இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:
மன உளைச்சல் நிறைந்த பணி/வேலைகளே ஒருவரின் மாரடைப்புக்கு பெரிதும் காரணமாக இருக்கின்றனவாம். அதனால், உங்கள் பணி/வேலை உங்களை அதிகமான மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வுக்கு உட்படுத்தினால், அந்த வேலையை விட்டு வேறு ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்வது சாலச் சிறந்தது என்கிறார்கள் இருதயநல மருத்துவர்கள்!
இந்த உலகத்துல எதுவுமே இல்லாமகூட வாழ்ந்துடலாம். ஆனா பணம் மட்டும் இல்லாம வாழவே முடியாது. ஏன்னா, பணம் பத்தும் செய்யும்னு உங்களுக்கே நல்லாத் தெரியும். ஆக, பணம் இல்லாம வாழ்க்கையே இல்லை அப்படீங்கிற கருத்த, உலகத்தையே உருவாக்கினதா சொல்ற கடவுளோடவே ஒப்பிட்டுப்பாடினாரு ஒரு கவிஞரு…..
“காசேதான் கடவுளப்பா…..அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா……?!”
அது சரி, ஆமா பணத்தை ஏன் ஆனானப்பட்ட கடவுளோடவே ஒப்பிட்டுப்பார்க்குறாங்க? அதுக்கான காரணம் உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும். அதாவது, மனித வாழ்க்கையின் ஆதாரமான ஆசை என்கிற உந்துதலால், மனிதர்களுக்கு ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய வல்லவரு, உலகத்தின் சகலகலா வல்லவராக நம்பப்படும் கடவுள். ஆனா, இந்த 21 ஆம் நூற்றாண்டுல அந்தக் கடவுளாலயே பூர்த்தி செய்ய முடியாத ஆசை/தேவையைக் கூட பணம்/காசு பூர்த்தி செய்துவிடும் அப்படீங்கிற நிதர்சனத்தை வலியுறுத்தத்தான், அனேகமா காசேதான் கடவுளடா பாடியிருக்காரு அந்த கவிஞரு?!
ஒரு மனிதனின் ஆசைகள் நிறைவேறிட்டா, அவனோட மனசு மகிழ்ச்சியடையும். பணமிருந்தா, மனுசனோட பெரும்பாலான ஆசைகள் நிறைவேறிடும். ஆக, பணமிருந்தா மகிழ்ச்சியை வாங்கிடலாம் அப்படீன்னு ஒரு கருத்து நம்ம மனித சமுதாயத்துல இருக்கு! இப்படியொரு கருத்து எவ்வளவுதூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுன்னு மக்கள்கிட்டக் கேட்டா, வாழ்க்கையைப் பத்தின அவரவரின் புரிதலினடிப்படையில, ஏகப்பட்ட கருத்துகள முன்வைப்பாங்கங்கிறது உண்மைதான்னாலும், அதுல பெரும்பாலானவங்களோட கருத்து, “ஆமாம், பணமிருந்தால் மகிழ்ச்சியை வாங்கிவிடலாம்” என்பதாகத்தானிருக்கும் அப்படீன்னு நம்மலால யூகிக்கத்தான் முடியுமே தவிர திட்டவட்டமா சொல்ல முடியாது! அப்படியே ஒருத்தர் அடிச்சு (?) சொன்னாலும், சமுதாயத்தைச் சேர்ந்த எல்லாரும் அதை ஏத்துக்க மாட்டாங்க!!
ஆனா, இதுவே ஒரு திட்டமிட்ட ஆய்வுமூலமா, “பணத்தால் மகிழ்ச்சியை வாங்கிவிட முடியுமா” அப்படீங்கிற கேள்விக்கு பதில் சொல்ல முயற்ச்சிப் பண்ணினா, ஒரு நம்பகமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய, நம்மை சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு கருத்து/முடிவுக்கு கண்டிப்பா வரமுடியும் இல்லீங்களா? அப்படியொரு திட்டமிடப்பட்ட ஆய்வுமூலமா, பணத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இடையிலான ஒரு தொடர்பை, விஞ்ஞானப்பூர்வமாக விளக்கிச்சொல்லும் ஒரு ஆய்வுப்பத்தின, ஒரு சிறுகுறிப்பைத்தான் இனி நாம இந்தப் பதிவு முழுக்க பார்க்கப்போறோம். வாங்க, பணத்துக்கும் மகிழ்ச்சிக்குமான தொடர்பை அப்படியே பிரிச்சு மேஞ்சுடலாம்……
வருமானமும் மகிழ்ச்சியும், அவிழும் ஒரு முடிச்சு!
நம்மில் பலர் நம்பிக்கொண்டிருப்பது போல, “பணமிருந்தால் வாழ்க்கையில் ஒரு ஒட்டுமொத்த திருப்தி கிடைக்குமென்பது உண்மைதான். ஆனால், தேவைக்கதிகமான பணம் வாழ்நாள் முழுவதிலும் மகிழ்ச்சியும், குதூகலமும் இருக்கும் என்பதற்க்கான உத்தரவாதத்தை தருவதில்லை” என்று, வருமானம் மற்றும் மகிழ்ச்சி குறித்து நடத்தப்பட்ட சமீபத்திய ஒரு சர்வேயில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!
“ஒருவரின் வருமானம் உயர உயர அவர்களின் வாழ்க்கையின் ஒட்டுமொத்த திருப்தி அதிகரித்தது என்றபோதும், ஒரு நாளின் பல தருணங்களில் ஒருவர் அடையும் மகிழ்ச்சியானது, அவர்களின் சமுதாய மற்றும் உடல் ரீதியிலான கூறுகளையே பெரிதும் சார்ந்திருந்தது” என்கிறது இந்த சர்வேயின் முடிவுகள். அதாவது, குறிப்பிட்ட ஒரு நாளில் ஒருவர் புகைப்பிடித்தாரா அல்லது அந்த நாளை தனிமையில் கழித்தாரா என்பதைப் பொறுத்தே அவரின் அன்றைய சந்தோஷம்/மகிழ்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது என்பதே இந்த சர்வே முடிவுகள் முன்வைக்கும் கருத்து!
இந்த சர்வேயின் முடிவுகள், இதையொத்த மற்றுமோர் சர்வதேச மகிழ்ச்சி குறித்த ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப்போகின்றன என்பதே இந்த ஆய்வின் மற்றுமோர் சுவாரசியம். அதாவது, சர்வதேச மகிழ்ச்சி குறித்த ஒரு ஆய்வில், அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. உதாரணமாக, தினசரி மகிழ்ச்சி அளவிலனடிப்படையில், சுமார் 132 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 26-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது!
மனநலம், வாழ்க்கையில் முழுமையான திருப்தி ஆகியவற்றை பாதிக்கும் வருமானம்!
சமீபத்தில் நடத்தப்பட்ட இந்தப் புதிய ஆய்வில், அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளார்கள் டேனியல் கானேமேன் மற்றும் அங்குஸ் டீட்டன் ஆகியோர் அடங்கிய குழு, ஒருவரின் வருமானம் அவரின் இருவகையான நலங்களான, உணர்வுரீதியான நலம்/மனநலம் மற்றும் வாழ்க்கையில் முழுமையான திருப்தி ஆகியவற்றை பாதிக்கிறதா என்றும் அப்படி பாதித்தால் எந்த விதத்தில் பாதிக்கிறது என்றும் அறிய முற்பட்டார்கள். இந்த ஆய்வை மேற்கொள்ள, ஒவ்வொரு நாளும் சுமார் 1000 அமெரிக்கர்களின் கருத்துகளை சேகரித்த, கேளப் நிர்வாகத்தின் “கேளப் ஹெல்த்வேய்ஸ் வெல்பீயிங் இன்டெக்ஸ் (Gallup-Healthways Well-Being Index)”-லிருந்து சுமார் 4,50000 கருத்துகளை ஆராய்ந்த்தார்கள்! மேலும், இந்த ஆய்வில் வருமானத்தில் ஏற்பட்ட எண்ணிக்கை மாற்றத்தை தவிர்த்து விழுக்காடு மாற்றங்களை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
“உதாரணமாக, ஒருவரின் வருமானத்தைப் பொறுத்தவரை, அவரின் மாத வருமானத்தில் ஏற்பட்ட 100 டாலர் ஏற்றம், குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய ஒரு மாற்றத்தை, அதே அளவு ஒரு நிதி நிறுவனத்தின் உயர்பதவியிலிருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தவில்லை! ஆனால், இவ்விருவரின் வருமானத்தின் இரட்டிப்பு இவ்விருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
வாழ்க்கைத்தரம் குறித்த மதிப்பீட்டிற்க்காக, ஆய்வில் கலந்துகொண்டவர்கள் “1 முதல் 10” வரையிலான எண்ணிக்கையில், மிகவும் மோசமான வாழ்க்கை தொடங்கி மிகவும் பிரமாதமான வாழ்க்கை என்கிற அடிப்படையில், தங்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். உணர்வுரீதியிலான நலம்/மனநலம் குறித்த மதிப்பீட்டிற்க்காக, ஆய்விற்க்கு முந்தைய தினம், ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட சாதகமான/மகிழ்ச்சியான உணர்வுகள் அல்லது பாதகமான/சோகமான உணர்வுகள் குறித்த கேள்விகளுக்கு சரி/தவறு என்னும் பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்!
ஆய்வின் முடிவில், ஆய்வில் கலந்துகொண்டவர்களில் சுமார் 85%, ஆய்விற்க்கு முந்தைய தினம் தாங்கள் அதிகமான சாதகமான உணர்வுகளான மகிழ்ச்சி, குதூகலம், சிரிப்பு/புன்னகை ஆகியவற்றை அனுபவித்ததாகவும், 24% மட்டுமே அதிகமாக சோகமான மற்றும் கவலையான உணர்வுகளை அனுபவித்ததாகவும் தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களின் சராசரியான வாழ்க்கைத்தர மதிப்பீடு 6.76 என்றும் அதில் அதிகபட்சமாக சில 10 வரையிலும் குறிப்பிட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!
உடல் நலக்குறைவு, தலைவலி, தனிமை, வயது முதிர்ந்தவர்கள் பராமரிப்பது போன்றவை குறைந்த உணர்வுரீதியிலான நலத்துடன் தொடர்புடையதாக இருந்தது என்றும், ஒரு கல்லூரி பட்டதாரியாக இருப்பது வாழ்க்கைத்தர மதிப்பீட்டில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அந்த கல்லூரி பட்டம் அவர்களின் தினசரி மகிழ்ச்சிக்கு எந்த விதத்திலும் காரணமாக இருக்கவில்லை என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!
பணம் பாதாளம் வரை பாயுமா? சில வரையரைகள்!
பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும் என்பது போன்ற பல பழமொழிகளை நாம் கேட்டிருப்போம். ஆனால், பணம் உண்மையிலேயே பத்தும் செய்யுமா? அல்லது பாதாளம் வரைதான் பாயுமா? வாங்க பணம் என்னதான் செய்யுது, அதோட வரையரைதான் என்ன அப்படீங்கிறதப் பார்ப்போம்……
இந்த ஆய்வில், “ஒருவரின் குறைந்த வருமானமானது, அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் துரதிஷ்டங்களான, விவாகரத்து, உடல் நலக்குறைவு மற்றும் தனிமை உள்ளிட்டவையால் ஏற்படும் மன உளைச்சலை அதிகப்படுத்துவது” கண்டறியப்பட்டது! உதாரணமாக, சுமார் 3000 டாலர் மாத வருமானம் ஈட்டுபவர்களில், 38% தங்களின் தினசரி வாழ்க்கையில் தலைவலி, நிறைந்த சோகம், கவலைகள் நிறைந்திருப்பதாகவும், ஆனால் 19% இவை இல்லையெனவும் குறிப்பிட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!
ஆனால், சுமார் 1000 டாலர் மாத வருமானம் ஈட்டுபவர்களுக்கு இதே தலைவலிகள் அவர்களின் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கிறது என்றும், உதாரணமாக இவர்களில் சுமார் 70%, தலைவலி ஏற்பட்டபோது சோகத்துடன் தொடர்புடைய “நீல உணர்வுகள்” ஏற்பட்டதாகவும், 38% தலைவலி ஏற்படாதபோது நீள உணர்வுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
ஆனால் மிகவும் சுவாரசியமாக, சராசரியாக சுமார் 75,000 டாலர் ஆண்டுவருமானம் உள்ளவர்களின் வாழ்க்கையில், பணமானது அவர்களின் தினசரி மகிழ்ச்சியை அதிகப்படுத்துவதில் எந்த விதத்திலும் உதவியாய் இல்லை என்று தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
ஆக, சுமார் 75,000 டாலருக்கு மேல் ஆண்டுவருமான ஈட்டுபவர்களுக்கு, அந்தப் பணமானது அவர்களின் உணர்வுரீதியிலான நலம்/மன நலத்துடன் தொடர்புடைய அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளான, நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, வலிகள் மற்றும் நோய்களை தவிர்ப்பது மற்றும் ஓய்வு நேரத்தை சந்தொஷமாக கழிப்பது போன்றவற்றை மேம்படுத்த எந்த விதத்திலும் உதவவில்லை என்பது தெளிவாக தெரிய வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள் டேனியலும், அங்குஸும்!
அதாவது, ஒருவரின் ஆண்டுவருமானமானது, 75,000 டாலருக்கும் அதிகமாக உயரும்பட்சத்தில், மகிழ்ச்சியான உணர்வுகளை வாங்கும் சக்தி அல்லது திறனானது, சில பாதகமான காரணிகளால் ஒரு சம நிலையை அடைந்துவிடுகிறதென்றும், அதற்க்குச் சான்றாக “அதிக வருமானமானது, ஒருவரின் சின்ன சின்ன சந்தோஷங்களை குறைத்துவிடுகிறது” என்பதைக் கண்டறிந்த மற்றுமொரு முந்தைய ஆய்வு முடிவுகள் இருக்கின்றன என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள் டேனியலும், அங்குஸும்!
அது சரி, இதையெல்லாம் படிச்சதுக்கப்புறம் உங்களுக்கு என்ன தோணுது? பணம் மகிழ்ச்சியை வாங்குவது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்……
பின்குறிப்பு: ஆய்வுப்பணிகள் மற்றும் சர்வதேச கான்ஃபெரென்ஸ் காரணமாக வெளியூர் சென்றிருந்தமையால், சுமார் இருவாரங்களாக பதிவேதும் எழுத முடியாமைக்காக வருந்துகிறேன். இருந்தபோதும், என் வலையை வாசித்து ஆதரவு அளித்துக்கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்! இனிவரும் காலங்களிலும், காலதாமதமாக வரும் பதிவுகளை ஆதரித்து என்னை தொடர்ந்து ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! நன்றி.
தொடர்புடைய சில பதிவுகள்:
Thanigasalam
ஒக்ரோபர் 1, 2010
பணம் இருந்தால் மகிச்சியை வாங்விடலாம் என்றால் எல்லா பணக்காரர்களும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டுமே! ஆனால் நிலைமை அப்படியில்லையே! பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தொடர்பேயில்லை. தினக்கூலி பெறும் தொழிலாளி மகிழ்ச்சியாய் இருப்பதும் பெரும் தொழிலதிபர்கள் மகிழ்ச்சியில் வறியவர்களாக இருப்பதையும் நாம் அன்றாட வாழ்வில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
வெங்கடேஷ்
ஒக்ரோபர் 2, 2010
நண்பரே முதலில் என்னை மன்னிக்கவும். ஐந்து மாதத்திற்கு மேலாகி விட்டது என்னால் இணையபக்கம் வரமுடியாமல் போய்விட்டது. முதல் காரணம் சிறிது உடல்நிலை சரியில்லை,இரண்டாவது காரணம் இணைய இணைப்பு சிறிது நாள்
துண்டிக்கப்பட்டிருந்தது.எது எப்படியோ தங்களை மறுபடியும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே
padmahari
ஒக்ரோபர் 8, 2010
வாங்க வாங்க வாங்க……,
எதுக்குங்க மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க. உங்கள மேலிருப்பானில் மீண்டும் சந்திக்கிறதே பெரிய மகிழ்ச்சி. என்னோட வலைப்பக்கத்துக்கு நீங்க ஒரு முக்கியமானவர், உங்க ஊக்கம் என்னோட வளர்ச்சிக்கு பெரிய உதவியா இருந்துச்சிங்கிறது உண்மை! மறுபடியும், மேலிருப்பானுடன் இணைந்தமைக்கு மிக்க நன்றி.
padmahari
ஒக்ரோபர் 8, 2010
//பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தொடர்பேயில்லை.//
இது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கூற்று. ஏன்னா, உங்க கருத்துல இருக்குற உதாரணத்தைப் பொறுத்தவரை, நீங்க சொல்ல வர்றது “நிம்மதியை”ப்பத்தித்தான்னு நெனக்கிறேன். அதை மகிழ்ச்சியோட குழப்பிக்கிட்டீங்க போலிருக்கு?! பணமிருக்கும் தொழிலதிபர்கள் பணமில்லாத தினக்கூலியுடன் ஒப்பிடும்போது மிக மிக அதிகமான மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள் (நிம்மதியை அல்ல!). உதாரணமா, ஒரு தினக்கூலி தன்னோட குழந்தைகளை கான்வென்டில் கல்வி பயிலச் செய்ய முடியாத நிலைதான் இன்றைய நிதர்சனம். அதனால் அதிலிருந்து அவர் பெறக்கூடிய மகிழ்ச்சி அவருக்கு கிடைக்காமல் போய்விடுகிறது, காரணம் பணமின்மை! ஆனால், நம் அம்பாணி சகோதரர்களில் ஒருவர் தன் மனைவிக்காக ஒரு சொகுசு விமானத்தையெ வாங்கி கொடுத்தார் என்று படித்ததாக நியாபகம். ஆக, அவர்கள் அளவுகடந்த பணமிருப்பதால், அளவுகடந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?! ஆனால், அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நிம்மதியை கொடுக்கிறதா என்பது கேள்விக்குறியே! ஆக, பணமிருந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியை வாங்க முடியும் என்பதே என் வாதம்! ஆனால், அதுவும் ஒரு வரையரைக்குட்பட்டதே என்பதே பதிவுச்செய்தி! கருத்துப்பகிர்வுக்கு நன்றிங்க…..
வெங்கடேஷ்
ஒக்ரோபர் 4, 2010
விஞ்ஞான வளர்ச்சிக்கு மின்சாரம் எப்படி அடிப்படை தேவையாகிவிட்டதோ
அதைப்போல நாட்டின் வளர்ச்சிக்கும்,மனிதர்களின் வளர்ச்சிக்கும் பணம்
அடிப்படை தேவையாகிவிட்டது.
கோடி ரூபாய் கொடுத்து பணம் காய்க்கும் மரம் ஒன்றை வாங்கி
நட்டானாம் அது வளர்ந்து பூத்து காய்த்து
பணமாக கொட்டியதாம் அந்த பணத்தையெல்லாம் சேர்த்து மறுபடியும்
கோடி ரூபாய் கொடுத்து பணம் காய்க்கும் மரமொன்று வாங்கி நட்டானாம்.
இப்படித்தான் மற்ற எந்த ஆசையும் வற்றிப்போகும் ஆனால் பணத்தாசை
மட்டும் எப்பொழுதுமே தீராது ஏழையின் ஏழ்மையைப்போல
padmahari
ஒக்ரோபர் 8, 2010
மிக மிக யதார்த்தமான, நிதர்சனமான ஒரு கருத்தை ஒரு கதைமூலம் ரொம்ப அழகாச் சொல்லியிருக்கீங்க! பணத்தாசையோட, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இப்படி எல்லாமே வற்றிப்போகாத ஆசைதான்னு நெனக்கிறேன். கருத்துப்பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே!
HARESH NARAYAN
ஒக்ரோபர் 5, 2010
மிக முக்கியமான டாபிக்-ஐ பற்றிய ஆழமான ஆய்வுத்தகவல்களோடு அற்புதமான கட்டுரைங்க… கண்ணை விற்று ஓவியம் வாங்குவதுபோல், நம் மகிழ்ச்சியை விற்று?!? பணம் வாங்குவதில் என்ன லாபம்… இந்த பணம் என்னும் மாயக்காகிதம்… இன்னும் எத்தனை பேரின் சந்தோஷத்தை பறிக்கவிருக்கிறதோ..!
padmahari
ஒக்ரோபர் 8, 2010
//கண்ணை விற்று ஓவியம் வாங்குவதுபோல், நம் மகிழ்ச்சியை விற்று?!? பணம் வாங்குவதில் என்ன லாபம்… இந்த பணம் என்னும் மாயக்காகிதம்… //
அழகான, அர்த்தமுள்ள வரிகள்……கருத்துக்கு மிக்க நன்றி ஹரீஷ்!
உங்க கேணிவனம் செம விருவிருப்பா போகுது……சூப்பர்! தொடர்ந்து கலக்குங்க, நேரம் கிடைக்கும்போது முழுசா படிச்சிட்டு உங்களை அழைக்கிறேன்! வாழ்த்துக்கள்.
படைப்பாளி
ஒக்ரோபர் 7, 2010
அருமையான பதிவுகளையும்,அட்டகாசமான செய்திகளையும் தொகுத்து தருகிறீர்கள்…நன்றி
padmahari
ஒக்ரோபர் 8, 2010
வாங்க படைப்பாளி,
முதல் வருகைக்கும், ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றிங்க. அடிக்கடி வலைப்பக்கம் வாங்க…..