ஜப்பானில் அணு உலைகளின் கூரைகள் வெடிப்பு; சில அறிவியல் விளக்கங்கள்…..

Posted on மார்ச் 14, 2011

52


என்னங்க, எல்லாரும் தொலைக்காட்சியில் வந்த ஜப்பான் பூகம்ப/சுனாமி செய்திகளை பார்த்தீங்களா?

8.9 ரிக்டர் அளவிலான பூகம்பமும், 30 அடி உயர ஆழிப்பேரலைகளுடன்கூடிய சுனாமியும் ஜப்பானைத் தாக்கிவிட்டு, வந்த வேலை முடிந்ததும் (?) போய்விட்டன. இவையிரண்டும் ஏற்படுத்திய பேராபத்துகளின் பாதிப்பு என்ன, இவற்றால் காணாமல் போன 100 பேர் கொண்ட கப்பல், பல நூறு/ஆயிரம் பயணிகளை தாங்கிய 3 ரயில்கள் என்னவாயின போன்றவற்றை துல்லியமாக கண்டறியவே சில வாரங்கள்/மாதங்கள் ஆகும் என்பதுதான் நிதர்சனம் எனும் வேளையில்…….

இடைவெளிகள் விட்டு தொடர்ந்து தாக்கிக்கொண்டிருக்கும் பூகம்பம் ஒருபக்கம் இருக்க, வந்துபோன பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட, ஜப்பானின் மின்சார உற்பத்தியின் அடிநாதமான, ஃபுகுஷிமா நகரிலிருக்கும் இரு அணு உலைகளின் கூரைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறியுள்ளது, இருப்பவர்களைத் தாக்கிவிட்டு போன சுனாமி/பூகம்பத்தைவிட பேராபத்தான, பின்வரும் பல சந்ததிகளை தொடர்ந்து தாக்கக்கூடிய அணு கதிர்களை/கதிரியக்கத்தினை சுற்றுச்சூழலுக்குள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது என்பதே!!

படம்: கூகுள்

டி.ஆர்.பி ரேட்டிங்கும், கோடிகளும் மட்டுமே (?) குறியாய் கொண்டு இயங்கும் ஊடகங்கள் எல்லாம், அணு உலைகளை உள்வைத்து பாதுகாக்க உருவாக்கப்பட்ட மேற்கூரைகள் வெடித்துச்சிதறிய காட்சியை மட்டும் ஊதிப்பெரிதாக்கி காட்டி, என்னவோ அணு உலைகளே சிதறிப்போய், அணுக்கதிர்கள் நாடெங்கும் பரவியதுபோன்ற பிம்பத்தை சிரத்தையுடன் ஏற்படுத்திவிட்டு, ஒன்றுமே நடவாததுபோல் மீண்டும் பழையபடி குலுக்க தளுக் நடன நிகழ்ச்சிகளையும், தமிழைக்கொன்றுகுவிக்கும் அழகிகளையும், இன்னும் இத்யாதி இத்யாதி குப்பைகளையும் காட்டத்தொடங்கிவிட்டன என்றே தோன்றுகிறது!

பெரும்பான்மையான ஊடகங்கள் இப்படித்தான் என்றால், வெடித்துச் சிதறிய காட்சிகளை பெரிதாகக்காட்டிய பல ஊடகங்களில் சில மட்டுமே, அந்த வெடிப்புக்குப்பின்னுள்ள அறிவியல் உண்மைகள், காரணங்கள், யதார்த்தங்கள் போன்றவற்றை ஏதோ தொடர்கதை/நாவல் எழுதுவதைப்போல பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளிவிட்டிருக்கின்றன.

“ஆமா, இதையும் ஒரு விளக்கப்படமா, எளிமையான காட்சிகள் மூலமாகவோ அல்லது ஒரு துறைசார்ந்த விஞ்ஞானி மூலமாகவோ மக்களுக்கு காட்டித்தொலைச்சா என்ன குறைஞ்சா போயிடுவீங்க” அப்படீன்னு, ஊடகங்கள் மேல வர்ற கோவத்த, இப்படியான வார்த்தைகள் மூலமா காமிக்கறத என்னால தவிர்க்க முடியல……!! தப்பாயிருந்தா சொல்லுங்க திருத்திக்கிறேன்.

அதெல்லாம் சரி, இப்போ நீ என்ன செய்யப்போற அப்படீன்னுதானே கேக்கப் போறீங்க இப்போ?

அப்படிக்கேளுங்க நாலு வார்த்த நறுக்குன்னு!

கோடி கோடியா பணம்கொழிக்கிற ஊடகங்கள் செய்யாத அந்த வேலையை, (நேரமேயில்லைன்னாக்கூட என்னோட உலக தமிழ் வாசகர்களுக்காக) ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலைகள் தொடர்பான வெடிப்பு பத்தி என்னோட சிற்றறிவுக்கு எட்டியவரை ஒரு அடிப்படை விளக்கத்தை கொடுத்து, தற்போது இங்கு நிலவும் உண்மைச்சூழலின் இயல்புகளை உங்களுக்கு எடுத்துச்சொல்லி புரியவைக்கலாமேன்னுதான் இந்தப் பதிவு……

அணு உலைகளின் உள்வடிவமைப்பு மற்றும் இயக்கம்; ஒரு சிறுகுறிப்பு!

யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்ற அணுசக்தி வேதியற்பொருட்களிலிருந்து மின் உற்பத்திசெய்ய, அவற்றை அணு உலைகளில் அடைத்துவைத்து பயன்படுத்துவார்கள். அணு உலைகளில் பல வகைகள் உண்டு. சமீபத்திய, பெரும்பாலான  நாடுகளில் மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது கொதிக்கும் தண்ணீர் அணுஉலை அல்லது Boiling water reactor, BWR என்னும் ஒருவகை அணுஉலையே! ஜப்பானில் ஃபுகுஷிமாவிலும் இதுதான் பயன்படுத்தப்படுகிறது! இது 1950களில் அமெரிக்காவின் GE/ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

கொதிக்கும் தண்ணீர் அணு உலை (Boiling water reactor, BWR)

(மேலிருக்கும் படத்தில் இடதுபக்கமிருக்கும்) அணுஉலையில், யுரேனியம் வேதிப்பொருள் குழாய்போன்ற கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு குளிர்ந்த நீருக்குள் மூழ்கவைக்கப்பட்டிருக்கும். யுரேனியத்திலிருந்து வெளியாகும் அணுசக்தியானது வெப்பத்தை உருவாக்கி, அதனைச்சுற்றியுள்ள குளிர்ந்தநீரை ஆவியாக்கும். அந்த ஆவியானது மின் உற்பத்தி செய்யும் டர்பைன் கருவியை இயக்கும்/சுழலச்செய்து மின் உற்பத்தியை தொடங்கும்/தூண்டும். டர்பைனை சுழலச்செய்தபின், அந்த நீராவியானது ஒரு கண்டென்சரின் உதவியுடன் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராகிவிடும். இந்த நீரானது மீண்டும் யுரேனியம் இருக்கும் அணு உலைக்குள் செலுத்தப்படும். இப்படியொரு சுழற்சியினால், யுரேனியத்திலிருந்து தொடர்ந்து 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்!

நான் சொன்ன விளக்கத்தை பின்வரும் காணொளியில தெளிவா காமிக்கிறாங்க, பாருங்க…..

இப்போ ஜப்பானின் ஃபுகுஷிமாவில் இருக்கும் அணு உலைகள்ல என்ன பிரச்சினைன்னு கொஞ்சம் தெளிவா பார்ப்போம் வாங்க…..

வெப்பம் தாங்காமல் வெடித்துச்சிதறிய இரண்டு அணு உலைகளின் மேற்கூரைகள்!

அடிப்படையில, ஃபுகுஷிமாவின் அணு உலைகள் வயதானவை. அதனால் அவை வேலை செய்யாமல் நிறுத்திவிட்டார்கள். வேலை செய்யாமல் நிறுத்தப்பட்டாலும், அணு உலைகளுக்குள்ளே வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இதனால் வெப்பமும், நீராவியும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்! யுரேனியத்தை பாதுகாக்கும் தண்ணீரின் அளவும் குறைந்துகொண்டே இருக்கும்! ஆகவே, அணு உலைகளை நிறுத்தியபின்னும் பல மாதங்கள் அவற்றை தொடர்ந்து  தண்ணீர் சுழற்சிமூலம் குளிர்வித்துக்கொண்டே இருக்க வேண்டியது மிக மிக அவசியம்!

இல்லையென்றால், தண்ணீரின்  அளவு குறைய குறைய, யுரேனியம் வெளியே வந்து, சிறுக சிறுக உருக ஆரம்பித்துவிடும்! அப்படி உருகினால் கதிரியக்கம், வெப்பம், நீராவியினால் உருவாகும் அழுத்தம் இப்படி எல்லாம் சேர்ந்து, அணு உலைகள் வெடித்துச் சிதறி, ஒரு பெரும் பிரளயத்தை ஏற்படுத்துவதோடு, கதிரியக்கத்தையும் சுற்றுச்சூழலுக்குள் பரப்பிவிடும்! கிட்டத்தட்ட ஒரு அணுகுண்டு வெடித்ததைப்போல!!

ஆனால், கடந்த 12.3.2011 சனிக்கிழமையன்று ஜப்பானில் அணு உலைகள் வெடித்ததாக உங்களுக்கு தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது, ஃபுகுஷிமாவில் இருக்கும் அணுமின் உற்பத்தி நிலையத்திலுள்ள அணு உலைகளை பாதுக்காக்கும் மேற்கூரைதான்! அது ஏன் வெடிச்சதுன்னா, அணு உலையை நீர்சுழற்சி மூலம் குளிர்விக்க பயன்படுத்தப்படும்  எந்திரம் வேலை செய்ய மின்சாரம் கொடுக்கும் ஜெனரேட்டர் செயலிழந்து போனதுனாலதான்! அதுக்குக் காரணம், சுனாமி ஏற்பட்டவுடன் அணு மின் உற்பத்தி நிலையத்து தடுப்புச்சுவரை உடைத்து உள்ளே புகுந்த கடல்நீரானது, அணு உலையை குளிர்விக்கும் நீரை சுழற்சிசெய்ய உதவும் ஜெனரேட்டரை மூழ்கடித்து செயலிழக்கச் செய்துவிட்டது. அது செயலிழந்தபின் மின்கல உதவியுடன் மீண்டும் அந்த எந்திரம் செயல்படுத்தப்பட்டாலும், சிறுது நேரத்துக்குப்பின் மின்கல மின்சாரம் தீர்ந்துபோகவே, மீண்டும் குளிர்விக்கும் எந்திரம் நின்றுபோனது!

இதற்கு மாற்று ஏற்பாடாக, அணு உலைகளை குளிர்விக்க கடல் நீரை உட்செலுத்தினார்கள். கடல் நீர் உட்செலுத்தப்பட்டதால், அணு உலையின் உள்ளே இருக்கும் நீர் கொதித்து நீராவி அதிகமானது. அது மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படாததால், அணு உலையினுள்ளே காற்றழுத்தம் அதிகமானது. இதனால் அணு உலை வெடித்துச் சிதறும் அபாயம் இருந்ததால், அந்த நீராவியை வெளியில் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிறு அளவிலான கதிரியக்க வேதியற் பொருட்களான சீசியம் 137 மற்றும் அயோடின் 121 ஆகியவை கலந்த நீராவியை வெளியில் திறந்துவிட்ட பின்னும் அணு உலையினுள் காற்றழுத்தம் குறைந்தபாடில்லை. விளைவு, காற்றழுத்தம் தாங்காமல் அணு உலையின் மேற்கூரை வெடித்துச் சிதறியது (சனிக்கிழமை)! இது நடந்தது, ஃபுகுஷிமாவின் தாய்இச்சி என்னும் அணுஉலை 1-ல்!

இந்த நீராவியை திறந்துவிடும் முன்னர்தான், மக்களின் பாதுகாப்பு கருதி அணுமின் உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள 12 மைல் சுற்றளவில் இருந்த மக்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு வெளியேறினார்கள்!

இதனையடுத்து, ஒரு நாள் கழித்து 14.3.2011 திங்கட்கிழமையான இன்று அணு உலை 1-ல் ஏற்பட்ட அதே பிரச்சினை தாய்இச்சி 3 அல்லது அணு உலை 3-லும் ஏற்படவே, அதனுடைய மேற்கூரையும் வெடித்துச் சிதறியது. இதுதான் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த, இரண்டாவதாக வெடித்ததாக சொல்லப்பட்ட அணு உலை?!

எங்கே செல்லும் இந்த பாதை?

முக்கியமாக, இந்த அணு உலையின் கூரைகள் வெடித்ததற்கு, லேசாக உருகத்தொடங்கிவிட்ட யுரேனியம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. யுரேனியம் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும்வரைதான் அது பாதுகாப்பாக இருக்கும், அதிலிருந்து மின்சாரம் மட்டும் நமக்கு கிடைக்கும். ஆனால் தண்ணீரின் அளவு குறைந்து, மூழ்கியிருக்க வேண்டிய யுரேனியம் வெளியில் நீட்டிக்கொள்ளத் தொடங்கிவிட்டால், அழிவுகாலம் தொடங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்!

ஏன்னா, தண்ணீருக்கு வெளியே வந்துவிட்டால் யுரேனியம் வேகமாக உருகத் தொடங்கிவிடும். அப்படி அது உருகினால்,  அதிலிருந்து வரும் வேதியல் மாற்றத்தினால் அணுவை விட சிறிய நுண்ணனு துகள்களும், அளவுக்கதிகமான வெப்பமும், அணுசக்தியும், கதிரியக்க வேதியற்பொருட்களும் வெளியேறும். ஒரு கட்டத்தில் அணுகுண்டு போல வெடித்துச்சிதறி,  சுற்றியுள்ள பல கிலோமீட்டர் பரப்பளவிலுள்ள மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களையும் ஏற்படுத்தி, தாவர-விலங்குகளையும் அழித்துவிடும்! அதுமட்டுமில்லாம, பாதிக்கப்பட்ட நிலப்பரப்பில் பல வருஷங்களுக்கு உயிர்கள் வளராது, மக்கள் புற்றுநோய்களால் பல சந்ததிகளுக்கு தொடர்ந்து  பாதிக்கப்படுவார்கள்!

லேசாக உருகத்தொடங்கிவிட்ட யுரேனியத்தை எப்படி மேலும் உருகாமல் பாதுகாப்பது என்பது குறித்து மிகுந்த சிரத்தையுடன் முயற்சி செய்து வருகிறார்கள் நாசா உள்ளிட்ட உலக மற்றும் ஜப்பானிய ஆய்வாளர்கள், அணுமின் உற்பத்தி அலுவலர்கள், பணியாளர்கள் எல்லோரும்!

அவர்கள் அனைவரும் அந்த முயற்சியில் வெற்றியடைய வேண்டும் என்று தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே!! இதுகுறித்த மேலதிக விவரங்களுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்……நன்றி!

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்புக்கு போய் படிங்க…….
பின்குறிப்பு: இந்த கட்டுரையில ஏதாவது துறைசார்ந்த தவறுகள் இருந்தால் மறக்காம சுட்டிக்காட்டுங்க, உடனே திருத்த முயற்சிக்கிறேன்.

தொடர்புடைய சில பதிவுகள்:

சுனாமியின் கோரமுகம் ஜப்பானின் பக்கம்!! மக்களோ சகஜநிலையை நோக்கி…..

ஆபத்து: உலக மக்கள்தொகையை உள்ளடக்க 2030-ஆம் ஆண்டில் இரண்டு பூமி வேண்டும், ஆய்வு!!

உலக அழிவு: இன்னும் 100 வருடங்களில் அழியப்போகும் ‘மனித’ இனம்!!

தொடர்புடைய பிற பதிவர்களின் பதிவுகள்:

ஜப்பான் அணு மின் நிலைய விபத்து – 3

மூன்று முகங்கள்

வயிற்றில் நெருப்பு !

கரணம் தப்பினால் மரணம்!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி