என்னங்க, எல்லாரும் தொலைக்காட்சியில் வந்த ஜப்பான் பூகம்ப/சுனாமி செய்திகளை பார்த்தீங்களா?
8.9 ரிக்டர் அளவிலான பூகம்பமும், 30 அடி உயர ஆழிப்பேரலைகளுடன்கூடிய சுனாமியும் ஜப்பானைத் தாக்கிவிட்டு, வந்த வேலை முடிந்ததும் (?) போய்விட்டன. இவையிரண்டும் ஏற்படுத்திய பேராபத்துகளின் பாதிப்பு என்ன, இவற்றால் காணாமல் போன 100 பேர் கொண்ட கப்பல், பல நூறு/ஆயிரம் பயணிகளை தாங்கிய 3 ரயில்கள் என்னவாயின போன்றவற்றை துல்லியமாக கண்டறியவே சில வாரங்கள்/மாதங்கள் ஆகும் என்பதுதான் நிதர்சனம் எனும் வேளையில்…….
இடைவெளிகள் விட்டு தொடர்ந்து தாக்கிக்கொண்டிருக்கும் பூகம்பம் ஒருபக்கம் இருக்க, வந்துபோன பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட, ஜப்பானின் மின்சார உற்பத்தியின் அடிநாதமான, ஃபுகுஷிமா நகரிலிருக்கும் இரு அணு உலைகளின் கூரைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறியுள்ளது, இருப்பவர்களைத் தாக்கிவிட்டு போன சுனாமி/பூகம்பத்தைவிட பேராபத்தான, பின்வரும் பல சந்ததிகளை தொடர்ந்து தாக்கக்கூடிய அணு கதிர்களை/கதிரியக்கத்தினை சுற்றுச்சூழலுக்குள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது என்பதே!!
டி.ஆர்.பி ரேட்டிங்கும், கோடிகளும் மட்டுமே (?) குறியாய் கொண்டு இயங்கும் ஊடகங்கள் எல்லாம், அணு உலைகளை உள்வைத்து பாதுகாக்க உருவாக்கப்பட்ட மேற்கூரைகள் வெடித்துச்சிதறிய காட்சியை மட்டும் ஊதிப்பெரிதாக்கி காட்டி, என்னவோ அணு உலைகளே சிதறிப்போய், அணுக்கதிர்கள் நாடெங்கும் பரவியதுபோன்ற பிம்பத்தை சிரத்தையுடன் ஏற்படுத்திவிட்டு, ஒன்றுமே நடவாததுபோல் மீண்டும் பழையபடி குலுக்க தளுக் நடன நிகழ்ச்சிகளையும், தமிழைக்கொன்றுகுவிக்கும் அழகிகளையும், இன்னும் இத்யாதி இத்யாதி குப்பைகளையும் காட்டத்தொடங்கிவிட்டன என்றே தோன்றுகிறது!
பெரும்பான்மையான ஊடகங்கள் இப்படித்தான் என்றால், வெடித்துச் சிதறிய காட்சிகளை பெரிதாகக்காட்டிய பல ஊடகங்களில் சில மட்டுமே, அந்த வெடிப்புக்குப்பின்னுள்ள அறிவியல் உண்மைகள், காரணங்கள், யதார்த்தங்கள் போன்றவற்றை ஏதோ தொடர்கதை/நாவல் எழுதுவதைப்போல பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளிவிட்டிருக்கின்றன.
“ஆமா, இதையும் ஒரு விளக்கப்படமா, எளிமையான காட்சிகள் மூலமாகவோ அல்லது ஒரு துறைசார்ந்த விஞ்ஞானி மூலமாகவோ மக்களுக்கு காட்டித்தொலைச்சா என்ன குறைஞ்சா போயிடுவீங்க” அப்படீன்னு, ஊடகங்கள் மேல வர்ற கோவத்த, இப்படியான வார்த்தைகள் மூலமா காமிக்கறத என்னால தவிர்க்க முடியல……!! தப்பாயிருந்தா சொல்லுங்க திருத்திக்கிறேன்.
அதெல்லாம் சரி, இப்போ நீ என்ன செய்யப்போற அப்படீன்னுதானே கேக்கப் போறீங்க இப்போ?
அப்படிக்கேளுங்க நாலு வார்த்த நறுக்குன்னு!
கோடி கோடியா பணம்கொழிக்கிற ஊடகங்கள் செய்யாத அந்த வேலையை, (நேரமேயில்லைன்னாக்கூட என்னோட உலக தமிழ் வாசகர்களுக்காக) ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலைகள் தொடர்பான வெடிப்பு பத்தி என்னோட சிற்றறிவுக்கு எட்டியவரை ஒரு அடிப்படை விளக்கத்தை கொடுத்து, தற்போது இங்கு நிலவும் உண்மைச்சூழலின் இயல்புகளை உங்களுக்கு எடுத்துச்சொல்லி புரியவைக்கலாமேன்னுதான் இந்தப் பதிவு……
அணு உலைகளின் உள்வடிவமைப்பு மற்றும் இயக்கம்; ஒரு சிறுகுறிப்பு!
யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்ற அணுசக்தி வேதியற்பொருட்களிலிருந்து மின் உற்பத்திசெய்ய, அவற்றை அணு உலைகளில் அடைத்துவைத்து பயன்படுத்துவார்கள். அணு உலைகளில் பல வகைகள் உண்டு. சமீபத்திய, பெரும்பாலான நாடுகளில் மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது கொதிக்கும் தண்ணீர் அணுஉலை அல்லது Boiling water reactor, BWR என்னும் ஒருவகை அணுஉலையே! ஜப்பானில் ஃபுகுஷிமாவிலும் இதுதான் பயன்படுத்தப்படுகிறது! இது 1950களில் அமெரிக்காவின் GE/ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
(மேலிருக்கும் படத்தில் இடதுபக்கமிருக்கும்) அணுஉலையில், யுரேனியம் வேதிப்பொருள் குழாய்போன்ற கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு குளிர்ந்த நீருக்குள் மூழ்கவைக்கப்பட்டிருக்கும். யுரேனியத்திலிருந்து வெளியாகும் அணுசக்தியானது வெப்பத்தை உருவாக்கி, அதனைச்சுற்றியுள்ள குளிர்ந்தநீரை ஆவியாக்கும். அந்த ஆவியானது மின் உற்பத்தி செய்யும் டர்பைன் கருவியை இயக்கும்/சுழலச்செய்து மின் உற்பத்தியை தொடங்கும்/தூண்டும். டர்பைனை சுழலச்செய்தபின், அந்த நீராவியானது ஒரு கண்டென்சரின் உதவியுடன் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராகிவிடும். இந்த நீரானது மீண்டும் யுரேனியம் இருக்கும் அணு உலைக்குள் செலுத்தப்படும். இப்படியொரு சுழற்சியினால், யுரேனியத்திலிருந்து தொடர்ந்து 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்!
நான் சொன்ன விளக்கத்தை பின்வரும் காணொளியில தெளிவா காமிக்கிறாங்க, பாருங்க…..
இப்போ ஜப்பானின் ஃபுகுஷிமாவில் இருக்கும் அணு உலைகள்ல என்ன பிரச்சினைன்னு கொஞ்சம் தெளிவா பார்ப்போம் வாங்க…..
வெப்பம் தாங்காமல் வெடித்துச்சிதறிய இரண்டு அணு உலைகளின் மேற்கூரைகள்!
அடிப்படையில, ஃபுகுஷிமாவின் அணு உலைகள் வயதானவை. அதனால் அவை வேலை செய்யாமல் நிறுத்திவிட்டார்கள். வேலை செய்யாமல் நிறுத்தப்பட்டாலும், அணு உலைகளுக்குள்ளே வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இதனால் வெப்பமும், நீராவியும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்! யுரேனியத்தை பாதுகாக்கும் தண்ணீரின் அளவும் குறைந்துகொண்டே இருக்கும்! ஆகவே, அணு உலைகளை நிறுத்தியபின்னும் பல மாதங்கள் அவற்றை தொடர்ந்து தண்ணீர் சுழற்சிமூலம் குளிர்வித்துக்கொண்டே இருக்க வேண்டியது மிக மிக அவசியம்!
இல்லையென்றால், தண்ணீரின் அளவு குறைய குறைய, யுரேனியம் வெளியே வந்து, சிறுக சிறுக உருக ஆரம்பித்துவிடும்! அப்படி உருகினால் கதிரியக்கம், வெப்பம், நீராவியினால் உருவாகும் அழுத்தம் இப்படி எல்லாம் சேர்ந்து, அணு உலைகள் வெடித்துச் சிதறி, ஒரு பெரும் பிரளயத்தை ஏற்படுத்துவதோடு, கதிரியக்கத்தையும் சுற்றுச்சூழலுக்குள் பரப்பிவிடும்! கிட்டத்தட்ட ஒரு அணுகுண்டு வெடித்ததைப்போல!!
ஆனால், கடந்த 12.3.2011 சனிக்கிழமையன்று ஜப்பானில் அணு உலைகள் வெடித்ததாக உங்களுக்கு தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது, ஃபுகுஷிமாவில் இருக்கும் அணுமின் உற்பத்தி நிலையத்திலுள்ள அணு உலைகளை பாதுக்காக்கும் மேற்கூரைதான்! அது ஏன் வெடிச்சதுன்னா, அணு உலையை நீர்சுழற்சி மூலம் குளிர்விக்க பயன்படுத்தப்படும் எந்திரம் வேலை செய்ய மின்சாரம் கொடுக்கும் ஜெனரேட்டர் செயலிழந்து போனதுனாலதான்! அதுக்குக் காரணம், சுனாமி ஏற்பட்டவுடன் அணு மின் உற்பத்தி நிலையத்து தடுப்புச்சுவரை உடைத்து உள்ளே புகுந்த கடல்நீரானது, அணு உலையை குளிர்விக்கும் நீரை சுழற்சிசெய்ய உதவும் ஜெனரேட்டரை மூழ்கடித்து செயலிழக்கச் செய்துவிட்டது. அது செயலிழந்தபின் மின்கல உதவியுடன் மீண்டும் அந்த எந்திரம் செயல்படுத்தப்பட்டாலும், சிறுது நேரத்துக்குப்பின் மின்கல மின்சாரம் தீர்ந்துபோகவே, மீண்டும் குளிர்விக்கும் எந்திரம் நின்றுபோனது!
இதற்கு மாற்று ஏற்பாடாக, அணு உலைகளை குளிர்விக்க கடல் நீரை உட்செலுத்தினார்கள். கடல் நீர் உட்செலுத்தப்பட்டதால், அணு உலையின் உள்ளே இருக்கும் நீர் கொதித்து நீராவி அதிகமானது. அது மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படாததால், அணு உலையினுள்ளே காற்றழுத்தம் அதிகமானது. இதனால் அணு உலை வெடித்துச் சிதறும் அபாயம் இருந்ததால், அந்த நீராவியை வெளியில் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிறு அளவிலான கதிரியக்க வேதியற் பொருட்களான சீசியம் 137 மற்றும் அயோடின் 121 ஆகியவை கலந்த நீராவியை வெளியில் திறந்துவிட்ட பின்னும் அணு உலையினுள் காற்றழுத்தம் குறைந்தபாடில்லை. விளைவு, காற்றழுத்தம் தாங்காமல் அணு உலையின் மேற்கூரை வெடித்துச் சிதறியது (சனிக்கிழமை)! இது நடந்தது, ஃபுகுஷிமாவின் தாய்இச்சி என்னும் அணுஉலை 1-ல்!
இந்த நீராவியை திறந்துவிடும் முன்னர்தான், மக்களின் பாதுகாப்பு கருதி அணுமின் உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள 12 மைல் சுற்றளவில் இருந்த மக்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு வெளியேறினார்கள்!
இதனையடுத்து, ஒரு நாள் கழித்து 14.3.2011 திங்கட்கிழமையான இன்று அணு உலை 1-ல் ஏற்பட்ட அதே பிரச்சினை தாய்இச்சி 3 அல்லது அணு உலை 3-லும் ஏற்படவே, அதனுடைய மேற்கூரையும் வெடித்துச் சிதறியது. இதுதான் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த, இரண்டாவதாக வெடித்ததாக சொல்லப்பட்ட அணு உலை?!
எங்கே செல்லும் இந்த பாதை?
முக்கியமாக, இந்த அணு உலையின் கூரைகள் வெடித்ததற்கு, லேசாக உருகத்தொடங்கிவிட்ட யுரேனியம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. யுரேனியம் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும்வரைதான் அது பாதுகாப்பாக இருக்கும், அதிலிருந்து மின்சாரம் மட்டும் நமக்கு கிடைக்கும். ஆனால் தண்ணீரின் அளவு குறைந்து, மூழ்கியிருக்க வேண்டிய யுரேனியம் வெளியில் நீட்டிக்கொள்ளத் தொடங்கிவிட்டால், அழிவுகாலம் தொடங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்!
ஏன்னா, தண்ணீருக்கு வெளியே வந்துவிட்டால் யுரேனியம் வேகமாக உருகத் தொடங்கிவிடும். அப்படி அது உருகினால், அதிலிருந்து வரும் வேதியல் மாற்றத்தினால் அணுவை விட சிறிய நுண்ணனு துகள்களும், அளவுக்கதிகமான வெப்பமும், அணுசக்தியும், கதிரியக்க வேதியற்பொருட்களும் வெளியேறும். ஒரு கட்டத்தில் அணுகுண்டு போல வெடித்துச்சிதறி, சுற்றியுள்ள பல கிலோமீட்டர் பரப்பளவிலுள்ள மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களையும் ஏற்படுத்தி, தாவர-விலங்குகளையும் அழித்துவிடும்! அதுமட்டுமில்லாம, பாதிக்கப்பட்ட நிலப்பரப்பில் பல வருஷங்களுக்கு உயிர்கள் வளராது, மக்கள் புற்றுநோய்களால் பல சந்ததிகளுக்கு தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்!
லேசாக உருகத்தொடங்கிவிட்ட யுரேனியத்தை எப்படி மேலும் உருகாமல் பாதுகாப்பது என்பது குறித்து மிகுந்த சிரத்தையுடன் முயற்சி செய்து வருகிறார்கள் நாசா உள்ளிட்ட உலக மற்றும் ஜப்பானிய ஆய்வாளர்கள், அணுமின் உற்பத்தி அலுவலர்கள், பணியாளர்கள் எல்லோரும்!
அவர்கள் அனைவரும் அந்த முயற்சியில் வெற்றியடைய வேண்டும் என்று தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே!! இதுகுறித்த மேலதிக விவரங்களுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்……நன்றி!
தொடர்புடைய சில பதிவுகள்:
சுனாமியின் கோரமுகம் ஜப்பானின் பக்கம்!! மக்களோ சகஜநிலையை நோக்கி…..
ஆபத்து: உலக மக்கள்தொகையை உள்ளடக்க 2030-ஆம் ஆண்டில் இரண்டு பூமி வேண்டும், ஆய்வு!!
உலக அழிவு: இன்னும் 100 வருடங்களில் அழியப்போகும் ‘மனித’ இனம்!!
தொடர்புடைய பிற பதிவர்களின் பதிவுகள்:
பாலாஜி கண்ணன்
மார்ச் 14, 2011
கூட்டு ப்ரார்த்தனையை தொடங்கி விட்டோம் நண்பா.
padmahari
மார்ச் 15, 2011
நன்றி நண்பா…. 🙂
அன்பரசன்
மார்ச் 15, 2011
அருமையான விளக்கம் நண்பரே!
padmahari
மார்ச் 15, 2011
மிக்க நன்றி அன்பரசன்…..
கார்த்திக்
மார்ச் 15, 2011
நன்றி பத்மஹரி இந்தத் தகவலை பழக குழுமங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்
padmahari
மார்ச் 15, 2011
மிக்க நன்றிங்க கார்த்திக்…..
யூர்கன் க்ருகியர்
மார்ச் 15, 2011
எளிதில் புரியும்படி விளக்கி உள்ளீர்.
நன்று…
நிறைய கேள்விகள் மனதில் எழுகின்றன. இருப்பினும் தேவையானவற்றை சுலபமாக புரிய வைத்ததற்கு நன்றிகள்.
padmahari
மார்ச் 15, 2011
மிக்க நன்றி யூர்கன்…..
//நிறைய கேள்விகள் மனதில் எழுகின்றன.//
உண்மை! நான் இன்னும் நிறைய எழுத எண்ணினேன். நேரமின்மை காரணமாக முழுவதுமாக எழுத முடியாமல் போகவே, மற்றொரு பதிவில் இற்றைப்படுத்தப்பட்ட பல தகவல்களுடன் உங்களை சந்திக்கலாம் என்றெண்ணி முடித்துவிட்டேன். அப்போது உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கக்கூடும்…..
vadivel
மார்ச் 15, 2011
Arumaiyana Vizahkam.. nandri..
padmahari
மார்ச் 16, 2011
மிக்க நன்றிங்க நண்பரே….
jaiganesh
மார்ச் 15, 2011
good post & nice explanation
padmahari
மார்ச் 16, 2011
Thanks for the comment…..
சீனு
மார்ச் 15, 2011
பிரார்த்தனை செய்தெல்லாம் பிரயோசனமில்லை. மனிதன் என்றைக்கு தன் தேவைகளை குறைத்துக்கொள்கிறானோ அப்போது தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் குறையும்.
மற்றபடி, நல்ல பதிவு.
ஆங்கில ஊடகங்கள் செய்வது ஊடக விபச்சாரம். அவர்களிடமிருந்து தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்ளவேண்டும். (“HT is the first channel to give you news from Ground Zero” – தூ நாய்களா). இந்த மாதிரி நிகழ்வுகளால் இந்த ஊடகங்களுக்கு கட்டற்ற மகிழ்ச்சி தானே ஒழிய, வருத்தப்படுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
padmahari
மார்ச் 16, 2011
நல்ல புரிதல்! நாம் மாறிவிட்டால் ஊடகங்களும் மாறித்தானே ஆகவேண்டும். ஏன்னா, நுகர்வோர் நாமதானே?!
கருத்துக்கு நன்றிங்க சீனு…..
ப.செல்வக்குமார்
மார்ச் 15, 2011
தெளிவான விளக்கம்க.. நன்றி
padmahari
மார்ச் 16, 2011
நன்றிங்க செல்வகுமார்…..
தவநெறிச்செல்வன்
மார்ச் 15, 2011
//சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவிலுள்ள எல்லாவற்றை பஸ்பமாக்கிவிடும்!// நண்பரே இந்த தகவல் உண்மையா? முந்தைய இரண்டு அணு குண்டுகளும் இத்தனை தூரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மற்றபடி நல்ல விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள், இதில் பல புதிய விஷயங்களை எழுதியுள்ளீர்கள் நன்றி.
padmahari
மார்ச் 16, 2011
//சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவிலுள்ள எல்லாவற்றை பஸ்பமாக்கிவிடும்!// நண்பரே இந்த தகவல் உண்மையா?//
மன்னிக்கனும். தவறாக எழுதிவிட்டேன்! இப்போது மாற்றிவிட்டேன் பாருங்கள். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிங்க…..
kousalya
மார்ச் 15, 2011
சரியான விவரங்கள் தெரியாமலேயே சில விசயங்கள் மீடியாக்களால் பெரிதுபடுத்த படுகின்றன. இதனால் மக்களுக்கு தவறான புரிதல்கள் ஏற்படுகின்றன…
உங்களின் இந்த விளக்கம் பலருக்கும் போய் சேர வேண்டும்…
யுரேனியம் மேலும் உருகாமல் பாதுகாக்க ஜப்பானிய ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெற என் பிராத்தனைகள் !
தகுந்த நேரத்தில் இப்படி ஒரு பகிர்வை வெளியிட்ட உங்களுக்கு என் பாராட்டுகள் ஹரி.
padmahari
மார்ச் 16, 2011
//சரியான விவரங்கள் தெரியாமலேயே சில விசயங்கள் மீடியாக்களால் பெரிதுபடுத்த படுகின்றன. இதனால் மக்களுக்கு தவறான புரிதல்கள் ஏற்படுகின்றன…//
இதுதாங்க பல பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமே……
கருத்துக்கு நன்றிங்க தோழி…..
ஸ்ரீஹரி
மார்ச் 15, 2011
தங்களுடைய வலைப்பக்கத்தை பார்த்தேன். வேர்ட்பிரஸ்.காமில் நீங்கள் customized widgets வலப்புறத்தில் உருவாக்கியிருப்பது போல் தெரிகிறது. இதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா? CSS edit செய்வதற்கு பணம் கட்டி சிறப்பு உரிமை பெற்றிருக்கிறீர்களா? அல்லது இலவச பிளாக்கிலேயே இது சாத்தியமா?
padmahari
மார்ச் 16, 2011
நான் பிரத்தியேகமாக எதையும் செய்யவில்லை ஸ்ரீஹரி. இலவச வேர்டுபிரஸ்ஸின் (wordpress.com) விட்ஜெட்களை அப்படியே எடுத்து பயன்படுத்தியிருக்கிறேன் அவ்வளவுதான்! கஸ்டமைசேஷன் குறிப்புகளை ஒவ்வொரு விட்ஜெட்டிலும் விளக்கமாக கொடுத்திருக்கிறார்கள். முயற்சித்துப்பாருங்கள்…..
K. Jayanthi
மார்ச் 15, 2011
மிக அருமையான பதிவுங்க. யுரேனியம் உருகாமல் இருக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்க வேண்டும் என பிரார்திக்கிறேன். நன்றி.
padmahari
மார்ச் 16, 2011
மிக்க நன்றிங்க தோழி…..
johan paris
மார்ச் 15, 2011
//தண்ணீரின் அளவு குறைய குறைய, யுரேனியம் வெளியே வந்து, சிறுக சிறுக உருக ஆரம்பித்துவிடும்//-
தங்கள் விளக்கம் மிக அருமை!
நேற்று ,திங்கள் வெடித்துச் சிதறிய அணுவுலைக்கு இதுதான் நடந்ததாம் என NHK கூறியது. மிகுதியைக் காப்பற்ற அமெரிக்க உதவியையும் நாடியுள்ளது.
பிராத்தனைகள் மாத்திரமன்றி நாம் அனைவரும் ஒரு சிறு அளவு மின்சாரத்தையும் வீணாக்காது வாழப்
பழகவேண்டிய காலம் வந்து விட்டது.
மிக அபாயகரமான வகையில் மின்சாரத்தைத் தயாரித்து; மிக அசட்டையீனமாகச் செலவு செய்கிறோம்.
உண்மையில் இரவில் ஒளிரும் நியோன் விளம்பரம்; ஒரு நாட்டிக்கு 500க்கு அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகள்; ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி; 24 மணிநேரமும் இயங்கும் கணனிகள் தேவையா?;மணிக்கணக்கில் தொலைபேசியில் அலட்டுவது; 6 மாதத்துக்கு தேவையான உணவு வகையை குளிர்பதனத்தில் சேமிப்பது….இன்னும் பல இவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டிய காலம்
நெருங்கிவிட்டது.
சூரிய ஒளி ;காற்றாலை மின்சாரம் பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.
padmahari
மார்ச் 16, 2011
நீங்கள் குறிப்பிட்டுள்ள பல விஷயங்களை குறைத்துக்கொள்ள வேண்டிய நேரம் எப்பொழுதோ வந்துவிட்டதுதான். ஆனால் அதை சாத்தியப்படுத்தத்தான் மக்களிடம் ஒரு ஆயத்தத்தையும் காணோம்?! நாம முயற்சிப்பண்ணுவோம், நம்மைப் பார்த்து மத்தவங்க மாறுகிறார்களா என்று பார்ப்போம். தெளிவான புரிதலை பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஜொஹான் பாரிஸ்…..
Bala
மார்ச் 19, 2011
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை .மின்சார சிக்கனத்தை மறந்துவிட்டு அணு உலை இல்லையென்றால்
இந்தியாவே இல்லை என்று கூறி வரும் அணு முதலாளிகளுக்கும் அமெரிக்க கை கூலிகளான இந்திய அரசியல்வாதிகளுக்கும் இது என்றுதான் புரியப் போகிறதோ .
padmahari
மார்ச் 21, 2011
உண்மைதான். கருத்துப்பகிர்வுக்கு நன்றிங்க பாலா…..
jas
மார்ச் 16, 2011
eluthum poothu neeraaka visayathukku vaarungkal arasiyal vaathi maathiri suthi vazaikaatheerkal……
டி.ஆர்.பி ரேட்டிங்கும், கோடிகளும் மட்டுமே (?) குறியாய் கொண்டு இயங்கும் ஊடகங்கள் எல்லாம், அணு உலைகளை உள்வைத்து பாதுகாக்க உருவாக்கப்பட்ட மேற்கூரைகள் வெடித்துச்சிதறிய காட்சியை மட்டும் ஊதிப்பெரிதாக்கி காட்டி, என்னவோ அணு உலைகளே சிதறிப்போய், அணுக்கதிர்கள் நாடெங்கும் பரவியதுபோன்ற பிம்பத்தை சிரத்தையுடன் ஏற்படுத்திவிட்டு, ஒன்றுமே நடவாததுபோல் மீண்டும் பழையபடி குலுக்க தளுக் நடன நிகழ்ச்சிகளையும், தமிழைக்கொன்றுகுவிக்கும் அழகிகளையும், இன்னும் இத்யாதி இத்யாதி குப்பைகளையும் காட்டத்தொடங்கிவிட்டன என்றே தோன்றுகிறது!
intha varikal theevayaa
padmahari
மார்ச் 16, 2011
நண்பர் ஜாஸ்,
//eluthum poothu neeraaka visayathukku vaarungkal arasiyal vaathi maathiri suthi vazaikaatheerkal……//
நீங்க தப்பான தளத்துக்கு வந்துட்டீங்க போலிருக்கு?! நீங்க சொல்ற மாதிரி “நேராக” விஷயத்துக்கு வர்றதுக்கு நான் செய்தித்தாள் எதுவும் நடத்தவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். அப்படி நேராக விஷயம் வேண்டுமென்றால் அப்படியே கொடுக்க பல செய்தித்தாள்கள் இருக்கின்றன!!
மத்தபடி, என் வலைக்கென்று ஒரு இலக்கணம் வகுத்து அதை பின்பற்றிவருகிறேன் கடந்த ஒரு வருடமாக. அது, எந்த ஒரு செய்தியையும் அதன் (எளிமையான) பின்புல விளக்கத்தோடு மக்களிடம் எடுத்துச்செல்வது என்பதே! அதை உங்களுக்காக மாத்திக்க முடியாது!!
//intha varikal theevayaa//
இந்த வார்த்தைகள் ஏன் தேவையில்லைன்னு நீங்களே கொஞ்சம் புரியும்படியா சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்! அது சரி, நான் என்ன இல்லாததும் பொல்லாததையுமா சொல்லிட்டேன்?! யதார்த்தத்தை, அதுவும் நாகரீகமாதானே சொன்னேன்! (ஒரு வேளை இதெல்லாம் தொடர்ந்து இருக்கனுமுன்னு நீங்க ஆசைப்படுறீங்க போலிருக்கு?!)
கருத்துக்கு நன்றி…..
ஹுஸைனம்மா
மார்ச் 16, 2011
நல்ல விளக்கமான பதிவு. நன்றி. யூ-ட்யூப் சுட்டியை ஃபார்வேர்ட் செய்துள்ளேன். ரொம்ப நன்றி.
padmahari
மார்ச் 16, 2011
மிக்க நன்றிங்க ஹூசைனம்மா! அந்த சுட்டி ஏற்படுத்துற ஒரு அடிப்படை புரிதல் நம்ம எல்லாருக்குமே அவசியம்…..
பாலாஜி கண்ணன்
மார்ச் 17, 2011
//நீங்க தப்பான தளத்துக்கு வந்துட்டீங்க போலிருக்கு?! நீங்க சொல்ற மாதிரி “நேராக” விஷயத்துக்கு வர்றதுக்கு நான் செய்தித்தாள் எதுவும் நடத்தவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். அப்படி நேராக விஷயம் வேண்டுமென்றால் அப்படியே கொடுக்க பல செய்தித்தாள்கள் இருக்கின்றன!!//
மிக சரியாக சொன்னீர்கள் .
padmahari
மார்ச் 18, 2011
நன்றி பாலாஜி 🙂
jas
மார்ச் 17, 2011
mukiyaa maana thakavalkalai vilakkum poothu athil joke ,naiyandi ponravaikalai neengal muthalil niraiya eluthi iunthaal meelum pathivai padikka interest irukaathu……neengkal kodutha anu ulai vilakkathukku antha varikal theevai illai…..enru thoonriyathu …..athanal manthil pattai thai chonneen
neengkal enna elakanam vathaalum enkku kavalai…………
padmahari
மார்ச் 18, 2011
//mukiyaa maana thakavalkalai vilakkum poothu athil joke ,naiyandi ponravaikalai neengal muthalil niraiya eluthi iunthaal meelum pathivai padikka interest irukaathu……neengkal kodutha anu ulai vilakkathukku antha varikal theevai illai…..enru thoonriyathu …..athanal manthil pattai thai chonneen //
இருக்கலாம். ஆனால், இந்த தளத்தில் பதிவு செய்யப்படும் பெரும்பாலான கருத்துகள் வெறும் வாசிப்பு சுவாரசியத்துக்காக மட்டுமே அல்ல! மாறாக, பல சூழ்நிலைகளில் மக்கள் சுதாரித்துக்கொள்ளவும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்த/ஏற்படுத்த உதவ கேட்டுக்கொள்ளவும்தான்!
//neengkal enna elakanam vathaalum enkku kavalai…………//
உண்மைதான். ஆனால் என்ன, உங்கள் மறுமொழியை முழுதாக முடித்திருக்கலாம் நீங்கள். என்ன முடித்திருந்தால், “என் பதிவிலக்கணம் பற்றி உங்களுக்கு கவலை இல்லை” என்றுதானே முடித்திருப்பீர்க்கள்?! கண்டிப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதை உங்களிடம் இங்கு யாரும் எதிர்பார்க்கவுமில்லை! ஏனென்றால்,
“பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்; குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். அதில் நீங்கள் இரண்டாவது வகையினராக இருக்கலாம் என்பது என் வாசகர்களுக்கு தெரிந்திருக்கும்!
மேலும், இம்மாதிரியான மறுமொழிகள் பலவற்றை மேலிருப்பான் பல முறை சந்தித்ததுண்டு. அதனால் இம்மறுமொழி எனக்கு விசித்திரமானதொன்றுமல்ல! முக்கியமான விஷயங்களை சொல்லும்போது அதைச் சார்ந்த தவறான சில விஷயங்களையும் நாகரீகமாக சுட்டிக்காட்டவேண்டியது என் கடமை. அதைச் செய்யும்போது பதிவின் சுவாரசியம் கெட்டுப்போனால் அதை பற்றி எனக்கும் கவலையில்லை. என் வாசகர்களுக்கும் அப்படியே என்று நம்புகிறேன்!!
இனி இந்த விவாதத்தை தொடர எனக்கு விருப்பமில்லை என்பதை தாழ்மையோடு சொல்லிக்கொள்கிறேன். கருத்துப்பகிர்வுக்கு நன்றி!
dhamodaran
மார்ச் 17, 2011
manidan than vasathikkaga than enaththiye thane aliththukkollum avala nilythan entha anu ulai……….
padmahari
மார்ச் 18, 2011
//மனிதன் தன் வசதிக்காக தன் இனத்தையே தானே அழித்துக்கொள்ளும் அவல நிலைதான் இந்த அணு உலை//
இரு வகையில் நீங்கள் சொல்வது உண்மைதான். நன்றிங்க தாமோதரன்…..
nilavu
மார்ச் 18, 2011
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_3285.html அணு உலைகளை பாதுகாக்க மறுத்த ஜப்பான் முதலாளித்துவம்!
-pls read it also
padmahari
மார்ச் 21, 2011
படிச்சேங்க….. நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்!
அப்பாதுரை
மார்ச் 20, 2011
விவரமாகவும் கோர்வையாகவும் எழுதியிருக்கிறீர்கள். நன்று.
padmahari
மார்ச் 21, 2011
பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க…..
ஜோசப் இருதயராஜ்
மார்ச் 20, 2011
நல்ல விளக்கமான பதிவு.
படத்தில் உள்ள இலக்க குறியீடுகளை பெயரிட்டு காட்டியிருந்தால் இன்னமும் தெளிவாக விளங்கிகொள்ள உதவியாக இருந்திருக்கும். ஆனாலும் உங்களின் இந்த முயற்சி ரொம்பவும் மதிக்க தக்கது. காலத்தின் தேவை அறிந்து தரப்பட்ட பதிவு / விளக்கம்.
ஆனா ஒன்னு யாரு தான் இதபத்தியெல்லம் கவலைபடுறா?… அடுத்தவனின் பலவீனத்தில் நாலு காசு பார்க்கதான் எல்லா ஊடகங்களும் பாடுபடுது….
இதில விளக்கம், மக்களை தயார்படுத்தல் எல்லாம் ச்சும்மா….
padmahari
மார்ச் 21, 2011
படத்துக்கான இலக்க குறியீடுகள கொடுக்கிற அளவுக்கு அப்போது நேரமில்லை! அவசரமாக எழுதிய பதிவு இது. விரைவில் கொடுக்க முயற்சிக்கிறேன். கருத்துக்கு மிக்க நன்றிங்க…..
தெய்வ சுப்ரமணியன்
மார்ச் 21, 2011
நல்ல விஷயம். குழப்பமான பல செய்திகள், பயமுறுத்தும் புகைப்படங்கள், காணொளிகள் என்று மீடியாக்களின் பிடியில் சோர்ந்து போயிருந்தேன்/தோம். ஒரு கோடி புண்ணியம்.
padmahari
மே 20, 2011
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க…..
வெங்கடேஷ்
மார்ச் 22, 2011
அருமையான விளக்கம் நண்பரே. தாங்கள் சொல்வது போல இந்த ஊடகங்கள் தங்களுடைய சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் ஏதோ எதுகை மோனைக்காக செய்திகளை சுவாரசியமாக சொல்கிறேன் என்று அணுஉலைகள் டமார் ஜப்பான் ஆனது பனார் என்று இப்படி கேவலமாக செயல்படக்கூடாது. எந்த ஒரு மருத்துவரும் உலகிலே நிறைய நோயாளிகள் உருவாக வேண்டும் அப்பொழுது தான் நமக்கு அதிகமாக வருமானம் வரும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால் பெரும்பாலான உடகங்கள் உலகில் எங்காவது ஏதாவது ஒரு பெரிய நிகழ்வு நடக்காதா அதை வைத்து ஏதாவது சுடச்சுட செய்திகள் போடலாம் என்று ஏங்கிக்கொண்டு இருப்பது போல தெரிகிறது .
padmahari
மே 20, 2011
யதார்த்தத்தை அழகா சொல்லியிருக்கீங்க, நன்றி நண்பரே…..
priya
ஏப்ரல் 2, 2011
ungaludaiya anaithu pathivugalum nandraga , payanullathaga irukirathu….. mukiyamaha intha pathivu arumai…. nandri intha pathivukku…
padmahari
மே 20, 2011
மிக்க நன்றிங்க ப்ரியா…..
riyas tichy
திசெம்பர் 4, 2012
ungal thagalvalgaluku nandri