Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஃபேஸ்புக் மாதிரி வலைப்பின்னல் தளங்கள், என்னதான் நமக்கு சந்தோஷம், உற்சாகம் எல்லாம் கொடுத்தாலும், அப்பப்போ  நம்ம வாழ்க்கையில கொஞ்சம் விபரீதமாக்கூட விளையாடிடும் போலிருக்கு! ஆமாங்க, கனடாவைச் சேர்ந்த நேதாலிக்கு, அப்படித்தாங்க  ஒரு அசம்பாவிதம்  நடந்திருக்கு!

நேதாலி ப்ளான்சர்டு கனடா நாட்டு ஐ.பி.எம் நிறுவனத்துல வேலை செய்றாங்க. மனச்சோர்வு நோயால பாதிப்பட்டு கடந்த ஒரு வருஷமா பணியிலிருந்து தற்காலிக விடுமுறை எடுத்துருக்காங்க.  ஆனா, மனச்சோர்வு நோய் காரணமா விடுமுறை எடுத்துக்கிட்டதுனால, “மனு லைஃப்” அப்படிங்கிற காப்பீட்டு நிறுவனத்துல இருந்து அவங்களுக்கு உபாதை விடுமுறை சலுகைகள் (பணம்) வாங்கிக்கிட்டு இருந்துருக்காங்க.

திடீர்னு அவங்களுக்கு வந்துக்கிட்டிருந்த விடுமுறைச் சலுகை பண உதவி சில மாதங்களா வரல. உடனே அவங்க மனு லைஃப் நிறுவனத்துக்கு தொலைபேசி மூலமா அழைச்சு ஏன் பணம் வரலன்னு கேட்டிருக்காங்க. அந்த நிறுவனத்துல இருந்து வந்த பதில் பெரும் அதிர்ச்சியா இருந்துருக்கு!

அப்படி என்ன சொன்னாங்க அந்த  நிறுவனத்துல?  நேதாலிக்கு உடல்நிலையில எந்த கோளாரும் இல்ல, அவங்க நல்ல ஆரோக்கியத்தோடதான் இருக்காங்க. அதனால அவங்க வேலைக்கு போகலாம். இந்தக் காரணத்துனால பண உதவி நிறுத்தப்பட்டது அப்படின்னு சொல்லிருக்காங்க மனு லைஃப் நிறுவனத்துல!

இதக் கேட்ட நேதாலிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! ஏன்னா, அவங்க இன்னும் மனச்சோர்வு நோயிலிருந்து முழுசா குணமடையல. ஆமா, நேதாலிக்கு உடல் நிலை சரியாயிருக்கா/இல்லையான்னு அவங்க சொல்லாம எப்படி மனு லைஃப் நிறுவனத்துக்கு தெரிஞ்சது? யாரு சொல்லிருப்பாங்க? இதானே உங்க கேள்வி/குழப்பம்?

இங்கதான் நம்ம ஃபேஸ்புக் நேதாலியோட வாழ்க்கையோட விபரீதமா வெளையாடியிருக்கு! எப்படின்னு கேக்குறீங்களா?

அதாவது, மனு லைஃப் நிறுவனம் நேதாலியோட ஃபேஸ்புக் ப்ரொஃபைல்ல இருக்கிற அவங்களோட சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்திருக்காங்க. அதுல அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்கிற, பிறந்த நாள் கொண்டாடுற, பார்ல தண்ணி அடிச்சிக்கிட்டு குதூகலமா இருக்கிற மாதிரியெல்லாம் இருக்கிற புகைப்படங்கள பார்த்துட்டுதான், அவங்களுக்கு உடல் நிலை பூரண குணமாயிடுச்சி அப்படிங்கிற முடிவுக்கு வந்து,  நேதாலியோட உதவித்தொகைய ரத்து பண்ணிட்டாங்க!

அடக்கொடுமையே….அப்படிங்கிறீங்களா? உண்மைதாங்க, கொடுமைதான்! உண்மையில நேதாலிக்கு மனச்சோர்வு நோய் இன்னும் குணமாகலை!  ஆனா தன்னோட மருத்துவரின் ஆலோசனைப்படி அவங்க சந்தோஷமா இருக்க முயற்ச்சி பண்ணியிருக்காங்க. அப்படி அவங்க இருந்தப்போ எடுத்த புகைப்படங்கள தன்னோட ஃபேஸ்புக் கணக்குல அப்லோட் பண்ணியிருக்காங்க!

இப்போ தன்னோட சலுகைப் பண உதவிய திரும்ப வாங்குறதுக்கு சட்டப்பூர்வமா முயற்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. மனு லைஃப் நிறுவனமும்  நேதாலியோட உண்மை நிலவறத்த புரிஞ்சிக்கிட்டு தங்களோட முடிவ மறுபரிசீலனை செய்யறதா சொல்லியிருக்காங்க!

பாருங்க….ஃபேஸ்புக் நம்ம வாழ்க்கையோட எப்படியெல்லாம் வெளையாடுத்துன்னு! அதுக்காக ஃபேஸ்புக் கணக்கு வச்சிருக்கிற எல்லாருக்குமே இப்படி எதாவது நடக்குமுன்னு சொல்ல முடியாது. ஆனா, எந்த பிரச்சினை எந்த விதத்துல வரும்னு யாருக்குமே தெரியாதுங்கிறதுதான் நிதர்சனம்.

அதனால, நம்ம சொந்த விஷயங்கள ஃபேஸ்புக் மாதிரியான வலைப்பின்னல் தளங்கள்ல குறைவா வெளியிடறதுதான் நமக்கு நல்லதுன்னு நான் நெனக்கிறேன்!

ஃபேஸ்புக் தொடர்பான விபரீதம் பற்றிய என்னுடைய இன்னொரு பதிவ நீங்க இங்க படிக்கலாம்

ஆமா, உங்களுக்கு இது மாதிரியான அனுபவங்கள் எதாவது ஏற்பட்டிருக்கா? இந்த மாதிரியான பிரச்சினையைப் பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க?

“புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு”, “புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்”, இப்படி என்னதான் எழுதி சிகரெட்டை விற்பனை செஞ்சாலும், “தம்மர தம்ம்ம்ம்…..கிக்கு ஏறுது ம்ம்ம்ம்ம்”, அப்படின்னு தம்மடிக்கிறவங்க அடிச்சிகிட்டுதான் இருக்காங்க!

புகைப்பிடிக்கிற ஒவ்வொருத்தருக்கும், புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வருது (குறைந்தபட்சம் மாரடைப்பு, புற்று நோய்), புகைப்பிடிக்கிற ஒருத்தரால சுத்தியிருக்கிற எத்தனை பேரு பாதிக்கப்படறாங்க அப்படின்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்கறத யாரும் மறுக்கமுடியாது!

எல்லாமே தெரிஞ்சிருந்தாலும், புகைப்பழக்கத்தை விட முடியாததுக்கு பல காரணங்கள். “வித்ட்ராவல் சிம்ப்டம்ஸ்” அப்படிங்கிறது புகைப்பழக்கத்த திடீர்னு நிறுத்தினா ஏற்படுற பின் விளைவுகள். இந்தக் காரணத்தால விடணும்னு நெனைக்கிறவங்க கூட விட முடியாம தவிக்கிறாங்க!

ஆனா, இந்தப் பதிவு அவங்களுக்கானது இல்ல! பொதுவா புகைப்பிடிக்கிற எல்லாருக்கும், அப்புறம் புகைப்பழக்கத்தைப் பத்தி ஒன்னும் தெரிஞ்சிக்காம, ச்சும்மா ஒரு “கிக்குக்காக/மப்புக்காக” புதுசா தம்மடிக்கிறவங்களும்தான் முக்கியமா இந்தப் பதிவை எழுதுறேன்!

மேல இருக்கிறத படிச்சுட்டு, மவனே…..நீ மட்டும் என் கைல கெடைச்ச உனக்கு….அப்படின்னு என் மேல பயங்கரமா கோவப் படற சீனியர்/ஜூனியர் நண்பர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிற விரும்புறேன். நாம (காலேஜில நான் கூட ராக்கிங்ல தம்மடிச்சேங்க! ஆஹா ரகசியம் போச்சே?!) எல்லாருமே தம்மடிக்க  ஆரம்பிக்கிறப்போ “ம்ம்ம்….ஒரு தம்முதான, என்ன பெருசா ஆயிடப்போவுது” அப்படின்னுதாங்க ஆரம்பிப்போம்!

அந்த ஒரு தம்மு அடிக்கிறதுனால நம்ம உடல் நலத்துக்கு, எவ்வளவு ஆபத்து/அபாயங்கள் ஏற்படுதுன்னு தெளிவா சொல்லத்தான் இந்தப் பதிவே! அது எப்படி சொல்ல முடியும் ஒரு தம்மு அடிக்கிறதுனால வர்ற பாதிப்ப? அப்படின்னு கேட்குறீங்களா…..

கண்டிப்பா சொல்ல முடியும்ங்க…..அப்படின்னு நான் சொல்லல! கனடாவின் மெக்.கில் பல்கலைக்கழக  இருதய மருத்துவர் “ஸ்டெல்லா தாஸ்கலோபோலு” சொல்றாங்க. சரி, வள வள பேசாம நேரா மேட்டருக்கு வருவோம்…..

18 முதல் 30 வயதானவங்கள்ல செயத ஒரு ஆய்வுல, ஒரே ஒரு சிகரெட் குடிச்சாக்கூட, சுமார் 25% வரையில ரத்த நாளங்கள் விரைக்கிறதாம் (அதாவது, ரத்த நாளங்களுக்கு உள்ளே ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதாம்!). என்ன, “ஐய்யோ சாமி….ஆள விடு இந்த வெளையாட்டுக்கு நான் வரல” அப்படிங்கிறீங்களா?

எனக்குக் கூட பகீர்னு இருந்தது இந்த செய்திய படிச்ச உடனே. நம்பறதா வேண்டாமான்னு கொஞ்ச நேரம் மனசுக்குள்ள ஒரு போராட்டமே நடந்துதுன்னா பாத்துக்குங்களேன்! ஆனா, வேற வழியே இல்ல நம்பித்தான் ஆகனும்…. நீங்களும்தான்!

அது சரி, விரைத்துப் போகும் ரத்த நாளங்கள்னால என்ன பிரச்சினை? ரத்த நாளங்கள் விரைத்துப் போவதால், சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு, இருதயம் கடுமையாக வேலை செய்தாலொழிய ரத்த ஓட்டம் சீராகாது என்னும் நிலை ஏற்படுகிறதாம்!  ரத்த நாளங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரைப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பும் இருக்கிறதாம்! (அப்படின்னா…..ஒரே ஒரு சிகரெட் குடிச்சாக்கூட 25% மாரடைப்பு வரும் வாய்ப்பு இருக்கா?!)

“அப்லனேஷன் டோனோமெட்ரி” (applanation tonometry) அப்படிங்கிற ஒரு புதுமையான( ஆனால் தேர்ந்த!) தொழில்னுட்பம் மூலமா “ஆர்டீரியல் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்” (arterial stress test) சோதனை மூலமா ரத்த நாளங்களோட விரைப்புத் தன்மைய கண்டுபிடிச்சிருக்காங்க டாக்டர் ஸ்டெல்லா!

ஆக, இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, சும்மா கிக்கு/மப்புக்காக ஒரே ஒரு தம்மடிச்சாலும் கூட,  நம்ம ரத்த நாளங்கள் பழுதடையறது மட்டுமில்லாம, சாதாரணமா ஓடி பேருந்தில் ஏறுவது, படிக்கட்டுகளில் ஏறுவது மாதிரியான தினசரி  நடக்கும் செயல்களுக்குக்கூட நாம் மிகுந்த சிரமப்பட்டுதான் செய்யனும் அப்படிங்கிற நெலமைக்கு ஆளாகவேண்டிவரும்னு சொல்றாங்க ஸ்டெல்லா!

சரி இப்போ நாம, இவ்ளோ பிரச்சினை பண்ற சிகரெட் குடிக்கிறத எப்படி விடறதுன்னு கொஞ்சம் பார்க்கலாம் வாங்க….

என்னங்க, இப்போ புரியுதா “ஒரே ஒரு சிகரெட்டுதானே”, அப்படின்னு இனிமே ஏன் சொல்ல முடியாதுன்னு?! ஒரு சிகரெட்டுன்னாக்கூட, அது உடம்புக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துதுன்னு பார்த்தீங்கள்ள?

அதனால “புகைப்பழக்கத்தை துறப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்”!

உங்க எல்லாருக்குமே தெரியும் வயசுக்கு வந்த ஒவ்வொருத்தரையும், இந்த ஹார்மோன்கள் என்ன பாடுபடுத்தும்னு! அதாங்க, “மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா” அப்படின்னு சொல்லுவோமில்ல?!

பொதுவா, வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு புத்துணர்ச்சி, கிளர்ச்சி எல்லாம் உண்டாகுறதுக்கு காரணம், அவங்க உடம்புக்குள்ள இருக்கிற சில ஹார்மோன்கள் பண்ற சேட்டைதான்!

சரி,  நாம முக்கியமான விஷயத்துக்கு வருவோம். நீங்க எல்லாருமே எதாவதொரு வயசுல காதல்வயப்பட்டிருப்பீங்க, அதனால உங்களுக்கு காதல்னா என்னன்னு தெரியும். ஆனா, உங்களுக்கு “காதல் ஹார்மோன்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு (அது எதுன்னு) தெரியுமா?

படம்:கூகுள்

“ஆக்ஸிடோசின்” அப்படிங்கிற ஹார்மோனைத்தான் காதல் ஹார்மோன்னு சொல்றாங்க மருத்துவர்கள்.  ஆமா, ஏன் அப்படிச் சொல்றாங்க?

இந்த ஹார்மோன் பொதுவா, மகப்பேறு காலங்கள்லயும், உடலுறவு சமயங்கள்லயும் அதிகமா சுரக்குமாம்! அதுமட்டுமில்லாம “உடலுறவுக்கு” அடிப்படையே இந்த ஆக்ஸிடோசின்தானாம்!

காதல்ன உடனே அது ஒரு இனம்புரியாத உணர்வு, தெய்வீக உணர்வு அப்படின்னெல்லாம் சொல்லுவாங்க இல்லியா?

ஆனா, அடிப்படையில “காதல்” அப்படின்னா என்னன்னு (மருத்துவ ரீதியா) பார்த்தோமுன்னா,  மனுஷனோட பொதுவான உணர்வுகளான, “அன்பு, நம்பிக்கை, பரிவு, தியாக உணர்வு”, இப்படி பல வகையான உணர்வுகளோட ஒரு அழகான கலவைதான் காதல் அப்படின்னு சொல்லலாம்!

மேல சொன்ன அத்தனை உணர்வுகளையும் கட்டுபடுத்தக் கூடிய ஹார்மோன்தான்  இந்த ஆக்ஸிடோசின் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! அதனால தான் இந்த ஹார்மோனை காதல் ஹார்மோன்னு சொல்றாங்களோ?!

ஆனா இப்போ, மேட்டரு அது இல்ல! மேல குறிப்பிட்ட எல்லா நல்ல உணர்வுகளுக்கும் காரணமான அதே  ஆக்ஸிடோசின்தான் தீய உணர்வுகளான “பொறாமை, வக்கிரம்” போன்றவற்றுக்கும் அடிப்படைன்னு சமீபத்துல கண்டுபுடிச்சி இருக்காங்க ஹைஃபா பல்கலைகழகத்தச் சேர்ந்த ஆய்வாளர்கள்!

என்னாங்கடா இது…..அப்படின்னு தானே யோசிக்கிறீங்க?! இப்படித்தான் அந்த ஆய்வாளர்களும் ஆச்சரியம்/அதிர்ச்சியடைஞ்சாங்களாம்!  எப்படி யோசிச்சாலும் உண்மை அதுதானாம்?! ஒன்னும் சொல்றதுக்கில்ல!!

இதுவரைக்கும், அன்பு மாதிரியான நல்ல உணர்வுகளுக்கு மட்டுமே  அடிப்படைன்னு நெனச்ச ஆக்ஸிடோசின், வக்கிரம் மாதிரியான தீய உணர்வுகளுக்கும் காரணமா இருக்கிறது ஒரு பக்கம் அதிர்ச்சியா இருந்தாலும், “ஆட்டிசம்” போன்ற நோய்களுக்கான சிகிச்சையில இத பயன்படுத்தலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!

சரி, “ஆக்ஸிடோசின்” பத்தி படிச்சது படிச்சோம், இன்னும் கொஞ்சம் வெவரமா தெரிஞ்சிக்கலாமில்ல….. வாங்க இந்த காணொளியப் பார்ப்போம்!

சரிங்க, ஆக்ஸிடோசின் பத்தி சுவாரசியமான விஷயம் எதாவது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்….

நம்ம செல்போன வச்சு என்னெல்லாம் செய்யலாமுன்னு கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம். சரி, பேசுறத தவிர வேற என்னெல்லாம் பண்ணலாமுன்னு எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன்.

“போட்டோ புடிக்கலாம், வீடியோ எடுக்கலாம், பாட்டு கேக்கலாம், படம் பார்க்கலாம், டி.வி பார்க்கலாம், கேம்ஸ் வெளையாடலாம், நம்ம பில்லு கட்டலாம்(இன்னும் நெறையவே!)”.

சரி, இதெல்லாம் நமக்கு தெரியும். ஆனா நமக்குத் தெரியாத, நாட்டுக்கு ரொம்பத் தேவையான ஒரு ஆச்சரியமான வேலைய இப்போ செல்போன் செய்யுது. அதென்ன தெரியுமா உங்களுக்கு? அதாங்க, வீட்டுக் காவல்காரன் வேலை!

ஐய்ய….தோடா! வண்ட்டுகிறாரு புத்சா சேதி சொல்றதுக்கு, அந்த வேலையத்தான் ரொம்ப நாளா சர்வெய்லென்ஸ்/ செக்யூரிட்டி கேமரா செஞ்சுகிட்டிருக்கே, அப்புறம் எதுக்கு செல்போன் வேற அப்படீன்றீங்களா?

உண்மைதாங்க! ஆனா சர்வெய்லென்ஸ்/ செக்யூரிட்டி கேமரா வேவு பார்க்கிற விஷயத்த அப்பப்போ உங்களால தெரிஞ்சிக்கிட்டு, வீட்ல திருட ஆரம்பிச்ச திருடன, உடனே உங்களால புடிக்க முடியுமா?  அதாங்க, “ரியல் டைம்ல” நடக்கிறது எல்லாம்! உதாரணத்துக்கு நீங்க  வெளியூர்ல இருக்கும்போது, உங்க வீட்ல எப்போ, எந்த மூலையில, என்ன நடக்குதுன்னு உங்களால சொல்ல முடியுமா?!

இதுவரைக்கும் சொல்ல முடியாமதாங்க இருந்தது. ஆனா, இனிமே அப்படி இல்ல! வேலை/சுற்றுலா விஷயமா நீங்க வெளியூர் போயிட்டாலும், உங்க வீட்ல “ரியல் டைம்ல” என்ன நடக்குதுன்னு உங்களால வேவு பார்க்க முடியும்! ஆஹா இது நல்லாயிருக்கே….அது சரி, அதெப்படி  அப்படிங்கிறீங்களா?

Remote control: Travelers can keep an eye on home (AP)

படம்:Protectionone.com

“ப்ரொடெக்ஷன் ஒன்”, அப்படிங்கிற அமெரிக்க  நிறுவனம் ஒரு நவீன பாதுகாப்புக் கருவிய அறிமுகப்படுத்தியிருக்காங்க. அதுவும் ஒரு சர்வெய்லென்ஸ்/ செக்யூரிட்டி கேமரா கருவிதான்! ஆனா ,  அந்த கருவியில பதிவாகுற வீடியோ கோப்புகளை எல்லாம், உடனுக்குடன் இணையதளம் மூலமா, உங்க செல்போன் வழியா ஆன்லைன்ல எந்த நேரமும், உங்க வீட்டையோ/அலுவலகத்தையோ நீங்க கண்கானிக்கலாமாம்! அடங்கொக்கா மக்கா…..அப்படியா? சொல்லவே இல்ல?!

எப்புடீ….?! ஆக இனிமே, வீட்ல யாருமில்லன்னு திருட வர்ற எல்லாத் திருடனுக்கும் (அவன் வெடிகுண்டு முருகேசன்ல வர்ற “அலெர்ட் ஆறுமுகமா” இருந்தாக்கூட) ஆப்புதாங்க!

அதுமட்டுமில்லாம, இது திருடன்கிட்டே இருந்து  பாதுகாத்துக்கிற விஷயம் மட்டும் இல்லீங்க. வீடு, அலுவலகம், தொழிற்ச்சாலை, கடைகள் இப்படி எல்லா இடத்திலேயும் நடக்கிற திருட்டு, கொலை, கொள்ளை, அசம்பாவிதங்கள்  இப்படி எல்லாத்துலேயும் இருந்து நம்ம உடல், உடமைகள்  எல்லாத்தையும் பாதுகாத்துக்க முடியுமாம் இந்த நவீன கருவியுடன்!

இந்த பாதுகாப்புக் கருவியோட பயன்பாட்டைப் பத்தி, இதுல என்னென்ன விஷேசமான வசதிகள் இருக்கு அப்படிங்கிறத பத்தி இன்னும் விரிவாத் தெரிஞ்சிக்க, வாங்க இந்த வெப்பினாரைப் பார்ப்போம்….

பகுதி-1:

பகுதி-2:

இந்த பாதுகாப்பு கருவியப் பத்தி படிச்சதுக்கப்புரம் எனக்கு என்ன தோணுச்சின்னா…..

இனிமே நாம “திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டாலும் திருட்டை ஒழிக்க முடியும்” அப்படின்னு தைரியமா பாடலாம்!

ஆமா, உங்களுக்கு என்ன தோணுது……?

Corey-Haas-150x150“கோரி ஹாஸுக்கு ஏழு வயதானபோது, அவன் கூடவே பிறந்த கண் பார்வை சம்பந்தமான நோய், அவன் பார்வையை கிட்டத்தட்ட முழுவதுமாய் அழித்துவிட்டிருந்தது. அதன்பின்னர் கோரி என்னையோ, என் மனைவியையோ சார்ந்தே வாழ வேண்டியதாயிற்று” என்கிறார் கோரி ஹாஸின் தந்தை ஈதன் ஹாஸ்!

அன்றிலிருந்து கோரி பெரும்பாலும் ஒரு பிரம்பின் உதவியோடும், பெரியவர்களின் உதவியுடனுமே அன்றாடப் பொழுதுகளை கழிக்க ஆரம்பித்தான்.

பள்ளியில் கரும்பலகையின் எழுத்துகளை பார்க்க இயலாததால் ஒரு ஆசிரியரின் உதவியோடு, ஒரு பெரிய  கணினித் திரைக்குமுன்னெ தன் பள்ளிப்பொழுதுகளைக் கழித்தான்!

வெளியுலகத்திற்கு கண்பார்வையற்றவனான கோரி, சிறிது காலங்களில் தன் பார்வை முழுவதையும் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். 13 மாதங்கள் கழித்து, தன் எட்டாவது பிறந்த நாளுக்குப்பின் ஒரு நாள், சோதனை முறை ஜீன் தெரபிக்கு உள்ளாகி தன் இடது கண்ணில் ஒரு ஊசி போட்டுக்கொண்டான் கோரி!

என்ன ஆச்சரியம், கோரியின் இடது கண் பார்வை நன்றாக தெரிய ஆரம்பித்திருந்தது!

தற்போது 9 வயதாகும் கோரி, நியூயார்க்கின் ஹாட்லி நகரில் பேஸ்பால் ஆடுகிறான், நடைவண்டி ஓட்டுகிறான், பள்ளியின் கரும்பலகைகளின் எழுத்துகளை வாசிக்கிறான். மேலும் தன் கண் பார்வை மிக நன்றாக இருப்பதாக சொல்கிறான்!

ஆமாம், பிறவியிலிருந்து கண் பார்வை இழந்த ஒரு சிறுவனுக்கு திடீரென்று எப்படி கண் பார்வை கிடைத்தது? இது எப்படிச் சாத்தியமாயிற்று? இதுதானே உங்கள் கேள்வி?!

இந்த அதிசயத்திற்கு காரணம் “கண்களுக்கான ஜீன் தெரபி”! கண் பார்வை இல்லாத எத்தனை பேருக்கு இந்த வகையான ஜீன் தெரபி சிகிச்சை பலனளிக்கும் என்பது இன்னும் தெரியவில்லையென்றாலும், இந்த சிகிச்சை முறையானது கண்டிப்பாக சில வகை கண்பார்வை நோய்களுக்கு நிறைந்த பலனளிக்கும் என்று நம்பிக்கையூட்டுகிறார்கள்!

“லான்செட்” என்னும் இங்கிலாந்து  நாட்டு அறிவியல் இதழில் ( journal Lancet) வெளியாகியுள்ள இந்த ஆய்வில்  கலந்து கொண்ட 5 குழந்தைகள் மற்றும் 7 பெரியவர்களுக்கு “லெப்பர்ஸ் கான் ஜெனிட்டல் அமாரோசிஸ்” (Leber’s congenital amaurosis) என்னும் பிறவிக்கண்பார்வை நோய் “ஜீன் தெரபி சிகிச்சை” மூலம் குணமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

அறிவியல் எல்லாம் வல்லது என்று சொல்லமுடியாதென்றாலும், “பிறவியிலேயே இழந்த பார்வையைக் கூட மீட்டுத்தற வல்லது”, என்று நிச்சயம் நம்பலாம் என்பதையே காட்டுகிறது இந்த ஆய்வு! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இச்செய்தியை மேலும் விரிவாக படிக்க இங்கு செல்லுங்கள்

மனிதனுக்கு பிறப்பு எப்படியோ அப்படித்தான் இறப்பும் ஒரு உலக நியதி.  பிறப்புக்கும் இறப்புக்குமான சிறு இடைவெளியில் வேண்டுமானால் நம் வாழ்க்கையை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் நம் தொடக்கமும் முடிவும் எப்படி என்பதை கடவுள் என்ற ஒருவர் தீர்மானிக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக நாம் தீர்மானிப்பதில்லை! ஆனால், ஒரு மனிதனின் இறப்புக்குப் பின் அவனை என்ன செய்வது என்பதை அவன் சுற்றமோ, நட்போதான் தீர்மானிக்கிறது. அதை நாம் ஈமச்சடங்கு/சவஅடக்கம் என்று சொல்கிறோம். அதாவது ஒரு மனிதனின் கடைசி நிமிடங்கள் அவை! எனக்குத் தெரிந்தவரை ஒருவர் இறந்தபின் பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி “இவரை எறிப்பதா இல்லை புதைப்பதா? என்பதுதான்!

எறிப்பதும் புதைப்பதும்தான் பெருவாரியான மக்களின் வழக்கு (அவரவர் மதப்படி/குலப்படி) என்றாலும் மற்றுமோர் வழக்கமும் உண்டு, அதுதான் ஒரு ப்ரேதத்தை அப்படியே (காகம்/கழுகு, இன்ன பிற விலங்குகளுக்கு இரையாகும்படி) விட்டுவிடுவது! சரி, இவை மூன்றும் நமக்கு தெரிந்தவதைதான். ஆனால் உலக வழக்கில் இவைதவிர்த்த இன்னும் பல வித்தியாசமான, சுவாரஸ்யம் கலந்த கடைசி நிமிடங்களும் உண்டு என்பதைத்தான் நாம் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்! என்ன, சற்றே மர்மம் நிறைந்த இந்த பயணத்துக்கு நீங்கள் தயாரா?

வாசகர்கள் கவனத்துக்கு: நீங்கள் 18 வயதுக்குட்பட்டவர் என்றால் மேலே படிக்காமலிருப்பது நல்லது! நன்றி.

அமைதியின் சிகரங்கள்! (Towers of Silence)

47849372.Yaz_Web_016சோராஸ்ட்ரிய மக்களின் குல வழக்கப்படி, ஒரு பிணமானது தூய்மையற்றது என்பதால் அது சுற்றுச்சூழலை பாதிக்கும் வண்ணம் எறிப்பதும், புதைப்பதும் முற்றிலும் தவறு என்பது அவர்களின் நம்பிக்கை! அதனால், இறந்தவர்களின் உடல்களை “அமைதியின் சிகரங்கள்” என்று சொல்லக்கூடிய, உயர்ந்த மலைமுகடுகளில் அமைந்திருக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று, விலங்குகளும் பிற உயிரினங்களும் புசிக்கும் வண்ணம் விட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள். பின்னர், சூரிய ஒளியில்  நன்கு உலர்ந்த, சுத்தமான எலும்புகளை சேகரித்து அதை எலுமிச்சை சாரில் கரைத்து வைத்துக்கொள்கிறார்கள்!

மர சவஅடக்கம்! (Tree Burials)

spaceballindian-tree-burialமரப்பெட்டியில் அடக்கம் செய்வது தெரியும், அது என்ன மர அடக்கம் என்கிறீர்களா?  உலகின் சில பண்டைய பழங்குடியினர் வழக்கப்படி, பிணங்களை சமபகுதியான பூமியில் புதைப்பதை விட, மிகவும் உயர்ந்த இடங்களில் சவஅடக்கம் செய்வதே பாதுகாப்பான, சிறந்த வழி என நம்புகிறார்கள்! ஆஸ்திரேலியா, ப்ரிட்டிஷ் கொலம்பியா, சைபீரியா நாடுகளைச்சேர்ந்த பழங்குடியினர் இவ்வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். அதாவது, பிணங்களை ஒரு துணியில் சுற்றி அதை ஒரு கொக்கியில் மாட்டி , உயரமான மரத்தில் தொங்கவிட்டுவிடுகிறார்கள்! என்ன கொடுமை சரவணன் இது?!

வைக்கிங் கப்பல் சவ அடக்கங்கள்! (Viking Ship Burials)

oseberg_longship_largeஎட்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த, ஸ்கேண்டினேவியாவின் கடல் கொள்ளையர்களை “வைக்கிங்” என்று அழைக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கடலிலேயே இறந்துவிடுவது வழக்கமாம்.  அப்படி இறப்பவர்களின் (செல்வந்தர்கள்) உடல்களை ஒரு பெரிய கப்பலில் வைத்து, அக்கப்பலில் உணவு, ஆபரணங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றையும் நிரப்பி, சமயங்களில் சேவகர்கள், மற்றும் விலங்குகளையும் உடன் சேர்த்து, இறந்தவர்களின் இறப்புக்குப் பின்னான வாழ்வில் உதவும்படி இருக்கட்டும் என்று, இறுதியில் அந்த கப்பலை கடலுக்கு அனுப்பி வைப்பார்களாம்! ஆஹா…..இது நல்லா இருக்கே! குடுத்துவச்சவங்கெ?!

திபெத்தின் வான் சவ அடக்கம்! (Tibetan Sky Burial)

Vultures_fighting_over_fleshஉங்களில் யாருக்காவது பறக்கும் ஆசை இருந்தால் (வாழும்போது அல்ல!?) முதலில் திபெத்து நாட்டுக்கு செல்லுங்கள்! ஆம், திபெத்து நாட்டில் ஒவ்வொருவரும் இறந்தபின், பிணங்களை நிலங்களில் புதைப்பதற்கு பதிலாக, மலை உச்சிக்கு (பறந்து சென்று?!) அனுப்பி வைக்கிறார்கள்! அப்படிச் செய்வதால், கழுகளுக்கு இரையாகிறது மனித உடல். அது மட்டுமல்லாமல், சமயங்களில் பிணங்களினுள்ளே பாலையும், மாவையும் கலந்து வைத்து அனுப்புவார்களாம். ஏனென்றால் அதை உண்ணும் கழுகுகள் , ஒரு துண்டு கூட மீதம் வைக்காமல் முழுமையும் உண்டு அவ்விடத்தை சுத்தமாக விட்டுச்செல்ல வேண்டுமென்பதற்காக! இதுக்கெல்லாம் இவிங்க…..ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ??!

சிக்கிய சடலங்கள்! (Bog Bodies)

grauballemanmm3வட ஐரோப்பாவில், சேறும் சகதியும் நிறைந்த பகுதிகளை கடக்கும் சுற்றுலாப் பயணிகள், சமயங்களில் அதில் சிக்கி இறந்துவிடுவதுண்டு. அப்படி இறப்பவர்களின் உடல்களையே (அவ்வப்போது வேண்டுமென்றே, சில வயதானவர்களின் பிணங்களை இது போன்ற சேற்றில் புதைத்தும் விடுவார்களாம்!) சிக்கிய உடல்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அத்தகைய உடல்களை ஆய்வுக்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் ஐரோப்பியர்கள்!

நியான்டர்தால் மனிதர்களின் குகை சவ அடக்கங்கள்! (Neanderthal Cave Burials)

shanidarசுமார் 100,000 வருடங்களுக்கு முன்பு, பிணங்களை நிலத்தில் சவ அடக்கம் செய்யும் முறையை அறியாத நியான்டர்தால் மனிதர்கள்,  பிணங்களை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நீண்ட குகைகளில் போட்டு விடுவார்களாம்! சில அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நியான்டர்தால் மனிதர்கள், ஒருவரின் ஆத்மாவானது இறந்தபின் வேறு உலகத்திற்கு செல்ல ஏதுவான இடம் குகைகளே என்று நம்பினார்களாம்!  நல்லாத்தான்யா கெளப்புறாங்க பீதிய?!

சவப்பதப்படுத்தல்! (Plastination)

man_with_skinஜெர்மன் நாட்டு விஞ்ஞானி கந்தர் வான் ஹேகென்ஸின், பிணங்களின் பதப்படுத்தல் முறையில், பிணங்களை துண்டு துண்டாக வெட்டி பின் ஆய்வுகளுக்கு ஏற்றவாறு பல கோணங்களில் வைத்து, பல  வேதியல் திரவங்களைக் கொண்டு அவற்றை பதப்படுத்தி விடுவார்களாம்! அப்படிப் பதப்படுத்தப்பட்ட பிணங்களை உலகில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களுக்கு அனுப்புவார்களாம்! இங்க பாருய்யா!?

உறையவைத்து சவ அடக்கம்! (Cryonics) (18+)

Liftingஇப்பொழுதும் வழக்கில் இருக்கும் இந்த வகையான சவ அடக்கத்தில், இறந்தவர்களின் உடல்களை உடனே திரவ நைட்ரஜன் என்னும் திரவத்தில் (-198 டிகிரி சென்டிக்ரேடு!) இறந்தவரின் உடல் மீண்டும் உயிர்ப்பெரும் நிலையைமுழுமையாக இழக்கும்வரை விட்டுவிடுவார்கள். இதுவே ஆங்கிலத்தில் க்ரையோனிக்ஸ் எனக் கூறப்படுகிறது!

மம்மி! (Mummification)

240px-Mummy_in_Vaticanஉலகத்தின் பிணங்களிலேயே மிகவும் பிரபலமானது எகிப்து நாட்டின் மம்மியாகத்தானிருக்கும்! மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே மேற்கொள்ளும் சவ அடக்க முறையான இந்த மம்மியை உருவாக்க,  இறந்தவர்களின் உடலில் உள்ள எல்லா பாகங்களையும் எடுத்து, (மூளையை மட்டும் மூக்கு வழியாக ஒரு கொக்கியை விட்டு இழுத்துவிடுவார்களாம்……யப்பா!?) பின்னர், வெற்றுடலை மரத்துகள்களைக் கொண்டு அடைத்து, இறுதியில் ஒரு வகையான நாற்றைக்கொண்டு உடல் முழுவதையும் இறுகச்சுற்றி விடுவார்களாம்! அப்படி  உருவாக்கப்படும் மம்மிகளுக்குள்ளே அந்த ஆத்மாவானது இறப்புக்குப் பின்னான வாழ்வுக்குள் பயணப்படுகிறது என்பதே எகிப்தியரின் நம்பிக்கையாம்!

என்னங்க, ஒரு திகில் படம் பார்த்த மாதிரி இருக்குமே? எனக்கும்தாங்க!  நம்மைச் சுத்தி இருக்குற உலகத்துல நமக்குத் தெரியாத எத்தனை மர்மங்கள்/ஆச்சரியங்கள் இருக்குப் பாருங்க.

இனிமே, “எங்கே செல்லும் இந்தப் பாதை…..யாரோ யாரோ அறிவார்” அப்படின்னு பாட வேணாமுன்னு நெனக்கிறேன். ஏன்னா, இப்பதான்  நமக்கு நல்லா தெரிஞ்சிபோச்சே, இந்த பாதை கடைசியில எங்கே போய் முடியுதுன்னு?!

நீங்க என்ன நெனக்கிறீங்க?

ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை  சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், “நான் உன்னை உயிருக்குயிராக  நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை.  நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று  எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால்,  தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன் “,  என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.

அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள்.  அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள்.  அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான். கதையைக்கேட்ட ஜென் துறவி, “இந்தப் பேய் மிகவும் புத்திசாலியானப் பேய்தான்” என்கிறார். ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற , செய்கிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான்.  அத்துறவியோ புன்னகைத்தபடி, “அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ  பெருமைப்பட வேண்டும்” என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்!

அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், “உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை,  அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும்  நீ விடை சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்கிறான்.

சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய  அள்ளி, ” என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்” என்கிறான். அவ்வளவுதான்,  அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!

என்ன, கதையைக் கேட்டாச்சா?  சரி, இப்போ நாம இந்தப்பதிவோட முக்கியமான செய்திக்கு வருவோம். அதாவது, கதை சொல்வதும் அதை புரிந்து கொள்வதும் ஒரு கலையாம். பெரும்பாலும் மக்கள், கதைகளில் வரும் வார்த்தைகளையும், கதையையும் மட்டுமே புரிந்துகொள்கிறார்களே தவிர, கதையின் அடிப்படைக் கருத்தை (மையக்கருவை) புரிந்துகொள்வதில்லையாம். அது எப்படி என்கிறீர்களா? உதாரணத்துக்கு இக்கதையையே எடுத்துக்கொள்வோம். இக்கதையைக் கேட்ட/படித்த சிலர் என்ன சொன்னார்கள் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்….

“யாருக்குமே எல்லாம் தெரிவதில்லை. பேய்களுக்கு கூடத்தான். சில வகையில் வேண்டுமானால் நாம் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் எல்லா வகையிலும் அல்ல”

“அந்த பேய் ஏன் திரும்ப திரும்ப வந்தது என்றால், எப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறது இந்தப் பேய் என்று அவன் எப்பொழுதும் ஆச்சரியப்பட்டான். அதனால், அந்தப் பேய் அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஒரு நாள்  எதிர்த்து நின்று தைரியமாக அவன் கேள்வி கேட்டவுடன் அந்தப் பேய் ஓடிவிட்டது”

“அவனில் ஒரு பகுதிதான் அந்தப் பேயே! அதனால், அவனுக்குத் தெரியாத எதுவும் அந்தப் பேய்க்கு தெரியவில்லை”

” அவனுடைய மனதிலிருந்துதான் அந்த பேய் வருகிறது. அதை உருவாக்கியவனும் அவனேதான். அவனுடைய குற்ற உணர்வுதான் பேயாக வந்து அவனை துன்புறுத்துகிறது”

” நாம் பயப்படுவதால்தான் எதுவுமே நம்மை பயமுறுத்துகிறது. அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது”

இன்னும் சிலர்…..

“எனக்கு இந்தக் கதையின் முடிவு பிடிக்கவில்லை. நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் நான் இந்த கதையை படிக்கத் தொடங்கினேன். கடைசியில் சப்பென்றாகிவிட்டது”

“ஆமாம் , அவன் ஒரு ஜென் துறவியைச் சந்தித்தான் என்று ஏன் அந்தப் பேயால் கண்டுபிடிக்க முடியவில்லை?”

ஒரே கதையை படித்தவர்களின் புரிதல்கள் எத்தனை விதத்தில் இருக்கிறதென்பதை கவனித்தீர்களா? ஆக, கதை ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தில் அது பல்வேறு விதமாக திரிந்து, கடைசியில் கதையின் அடிப்படைக் கருத்து காணாமல் போய்விடுகிறது. இதுபோலத்தான் நம் பயங்களும், வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளும்!

உண்மையில் பேய்கள் என்பது நம் பயங்களும், மனதில் ஏற்பட்டு நம்மை அலைக்கழிக்கும் ஒரு வித உளவியல் நோய்களுமே. அத்தகைய பயங்களை உருவாக்கி நம்மை இம்சிப்பதே நம் மூளைதான். அது பயங்களையும் உருவாக்கும், அதேசமயம் வேறு யாரோ ஒருவர் வந்து நம்மை பயமுறுத்துவது போல புலம்பவும் செய்யும்! ஆக, நம் பயங்களுக்கும் துன்பங்களுக்கும் நம் மூளைதான் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.

இதைத்தான் சொல்கிறது ஜென் வரலாறு. ஜென் துறவிகள் நம் கற்பனைப் பேய்களைவிட (மனித மனங்கள்!) அதிபுத்திசாலிகளாம். ஆனால், ஜென் துறவிகள் ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே இருக்கின்றனர்(பேய்கள் எங்கே இருக்கின்றன?). அவர்கள் சொல்வது என்னவென்றால், பேய்கள் என்பவை  நம் எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும்தான்.  பயப்படுவதற்கும், துன்பப்படுவதற்க்கும் நாம் விரும்பவில்லை என்றால் வேறு ஒருவர் வந்து  நம்மை எப்படி துன்புறுத்த முடியும்? சற்று சிந்தியுங்கள்!

அதனால், நாம் உருவாக்கிய பேய்களை (பயம், பற்று, எதிர்ப்பார்ப்பு, ஆசை, போதை….) நாமேதான் அழிக்க வேண்டும். மொத்தத்தில் பேய்கள்  நம்மைப் போன்ற உருவமில்லாதவை, வெறும் மனப் பிரம்மைகள்தான்! அவற்றை தூக்கி எறிந்துவிட்டு சென்றோமானால், நலமான வளமான வாழ்வை வாழலாம்!

இந்த ஜென் கதையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மக்கள எல்லாம் ஈர்க்குற மாதிரி ஒரு நல்ல வலைப்பதிவு ஒன்னு எழுதறதுக்காக, அப்பிடி யோசிச்சு, இப்பிடி யோசிச்சு, உக்காந்து, நின்னு, குப்புற படுத்தெல்லாம் யோசிச்சு (ஒரு வலைப்பதிவு எழுத இப்படியெல்லாமா யோசிக்கிறாங்க?!) ஒப்பேத்தி ஒரு வலைப்பதிவு எழுதினா…..

மக்கள் தேடிப்போறது என்னவோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக்காதல் இப்படிப்பட்ட “சுவாரசியமான” செய்திகளைத்தான்!

அப்படின்னு நான் சொல்லலப்பா, ஷங்கர் வேதாந்தம் அப்படிங்கிற ஒரு வலைப்பதிவர்தான் (வாஷிங்டன் போஸ்டில்) சொல்லியிருக்காரு! இது வலைப்பதிவுக்கு மட்டுமில்ல, தொலைக்காட்சி, செய்தித்தாள், வார/மாத இதழ்கள் இப்படி எல்லாத்துக்குமேதானாம். அடக்கொடுமையே!

ஆமாம் நாம ஏன் ஒரு செய்திய விரும்பி படிக்கிறோம், இன்னொன்ன கண்டுக்கவே மாட்றோம்? எப்பவாவது யோசிச்சு இருக்கீங்களா?

அது ஏன் ஒரு இத்துப்போன கள்ளக்காதலப் பத்தி வரச் செய்தியப் விரும்பிப் படிக்கிற நாம , நம்ம வாழ்க்கையை பாதிக்கிற/நல்வழிப்படுத்துற ஒரு செய்திய திரும்பிக்கூட பார்க்க மாட்டேங்கிறோம்?

நம்ம எல்லாருடைய இந்த “சுவாரசிய செய்திப்பசிக்கு”, ஒரு பரிணாமம் சார்ந்த காரணம் இருக்குன்னு சொல்றாரு ஷங்கர் வேதாந்தம். இதக் கண்டுபுடிக்க அவரு, கிட்டத்தட்ட 1700-கள்ல இருந்து 2001 வரைக்கும் வந்த, எல்லா முதல் பக்க செய்திகளையும் பத்தின ஒரு உளவியல் ஆய்வ, பிரிச்சு மேய்ஞ்சிருக்காரு!

அப்படி மேய்ஞ்சதிலதான் தெரிஞ்சிருக்கு, கிட்டத்தட்ட 300 வருஷமா எல்லா சமயங்கள்லயுமே கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து பத்தி வந்த செய்திகள்தான் பெரும்பாலும் முதல்பக்க/முன்னனி செய்திகளா வந்திருக்குன்னு! வெளங்கிடும்?!

மொத்தத்துல, நம்மல மனசளவுல பாதிக்காத, ஆனா படிக்கிறதுக்கு ரொம்ப சுவாரசியமான செய்தியத்தான் காலங்காலமா நாம எல்லாரும் படிச்சுக்கிட்டு வர்றோம் அப்படிங்கிறாரு வேதாந்தம். என்னங்க  அவரு சொல்றது உண்மைதானே?

அதனால சக வலைப்பதிவர்களுக்கு ஷங்கர் வேதாந்தம் சொல்றது என்னன்னா, ஒரு சூப்பர்ஹிட் வலைப்பதிவு எழுதனும்னா, மக்கள பாதிக்கிற மாதிரி ஆனா அதேசமயம் ப்ளேடு போடாத அளவுக்கு இருக்கிற ஒரு விஷயத்த எழுதனும் அப்படிங்கிறாரு. சரிங்கோவ்!

அதெல்லாம் சரி, இதப்பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க?

“பாம்பென்றால் படையும் நடுங்கும்”, அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதே பாம்பைப் பத்தி நமக்கு தெரியாத நெறைய விஷயங்கள் இருக்குங்க! உதாரணத்துக்கு,

“பாம்புக்கு காதே இல்ல, ஆனா நம்ம எல்லாரையும் விட அதிகமா  சப்தங்கள உணர்ற சக்தி அதுக்கு இருக்கு!”

“பாம்புகளுக்கு மூக்கே கிடையாது, ஆனா வாசனை/ நாற்றங்கள மிகச்சரியா உணர்ற திறன் இருக்கு!”

“உலகத்துலேயே மிகக் கொடிய “பயோவெப்பன்” என்ன தெரியுமா உங்களுக்கு, பாம்புகளோட விஷப்பற்கள்தானாம்!”

மேல நீங்க படிச்சது வெறும் ட்ரெய்லர்தாங்க…..இனிமேதான் படமே! வாங்க பார்ப்போம்….

பாம்புகள் உணவே இல்லாமல் பல மாதங்கள் வாழ மட்டுமல்ல, வளரவும் செய்யுமாம்!

snakes2_zoomநீங்க கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க, பல மாசத்துக்கு சாப்பிடாமலே இருந்துக்கிட்டு, ஆனா உயரமா வளர்ந்துகிட்டு எந்தத் தொந்தரவும் இல்லாம இருந்தா….அட அட அட, அந்த சொகமே தனிதான்! ம்ம்ம்….என்னத்த சொல்ல, அந்த குடுப்பனை நமக்கு இல்ல! குடுத்துவச்சது…..பாம்பச்சொன்னேங்க!

உலகத்தின் மிகச்சிறிய பாம்பு ஒரு நாணயத்தின் அளவுதான் இருக்கும்!

080801-thread-snake-02உலகத்துல இருக்கிற பாம்புகள்லியே, ரொம்பச் சின்ன பாம்பை 2008-ல “பார்படோஸ்”, அப்படிங்கிற இடத்துல கண்டுபிடிச்சாங்களாம். அதோட அளவு என்ன தெரியுமா, வெறும் 10 செ.மீ தானாம்!  இன்னொரு உபரித்தகவல், இந்த பாம்பை நம்மச் சென்னையிலதான் முதல்ல கண்டுபுடிச்சாங்களாம்! அது எவ்வளவு சின்னதா இருந்தா என்ன? பார்த்தா பயமாருக்கும்ல?!

நல்ல பாம்பு கண்ணத்தான் குறிவைக்குமாம்!

h_cobra_face_02சில வகை நல்ல பாம்புகள “துப்பும் நாகம்” (Spitting cobras) அப்படின்னு சொல்றாங்க. இந்த வகை நல்ல பாம்புகள், விஷத்த கிட்டத்தட்ட 2 மீட்டர் தூரம் வகை துப்பக்?! கூடிய சக்தி படைச்சவையாம். அடேங்கப்பா!  அதுமட்டுமில்லாம, இந்த பாம்பு கண்ணைக் குறி வச்சுத்தான் விஷத்தத் துப்புமாம். அப்படி  துப்புற விஷம் நம்ம கண்ணுல பட்டா, உடனே கண் குருடாயிடும்னு 2005-ல கண்டுபிடிச்சிருக்காங்க. யப்பா சாமி !கீழே இருக்கிற காணொளியில நீங்களே பாருங்க அந்த அநியாயத்த?!

மலைப்பாம்பு தன்னோட இரை முழுசையும் (எலும்பு கூட!) தின்றுவிடுமாம்!

rock_python2மலைப்பாம்புங்க மாசக்கணக்குல சாப்பிடாமலே இருக்குமாம். ஆனா அதேசமயத்துல, சாப்பிடும்போது ஒரு சின்ன துண்டு கூட விடாம,  நம்ம காம்ப்ளான் பையன் மாதிரி ” அப்படியே” சாப்ட்ருமாம்! அதுக்கு காரணம் என்னன்னா, பாம்புங்களுக்கு எலும்பைக்கூட செரிக்க வைக்கிற அளவுக்கு  சிறப்பான உடலமைப்பாம்! இத நான் சொல்றத விட நீங்களே பாருங்க புரியும்!

ஒரு வகை பாம்பு 50 அடி தூரம் வரை பறக்குமாம்!

நான் என்னவோ இதுவரைக்கும், பாம்பு படம் மட்டுந்தான் எடுக்கும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். இப்பதான் தெரியுது,  “பறக்கிற பாம்புங்க” (50 அடி தூரம்) கூட உலகத்துல இருக்குதாம்! அப்போ, பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்னு சொன்னதிலே ஒரு அர்த்தம் இருக்குது இல்ல? அப்படி பறக்கும்போது,  “S” வடிவத்துல உடல வளச்சு பறக்குமாம். அது சரி, பார்த்தா தானே எதையுமே நம்ப முடியும்?! சரி வாங்க பார்ப்போம்….

ஒரு பாம்பு அதவிட நீளமான இன்னொரு பாம்பை சாப்பிட்டுவிடுமாம்!

அது எப்படி ஒரு பாம்பு, தன்னைவிட நீளமான இன்னொரு பாம்பை விழுங்க முடியும்? அப்படின்னு கேட்குறீங்களா? எனக்கும் அதே கேள்விதாங்க! சொன்னா நீங்க நம்ப மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். வாங்க நேராவே பார்போம்…..

நம்ம ராஜ நாகம் கூட இன்னொரு பாம்ப சாப்பிடுமாம், தெரியுமா உங்களுக்கு? எனக்கு இதுவரைக்கும் தெரியாதுப்பா! வாங்க எப்படின்னு பார்த்து தெரிஞ்சிக்குவோம்….

சரிங்க, இப்போ இது எப்படி இருக்குன்னு நான் கேட்க மாட்டேன். ஏன்னா, இது எல்லாமே எனக்கு தெரியாத விஷயங்கள். அதனால, ஒரே பிரமிப்பாதான் இருக்கு எனக்கு இந்த பாம்பு கதைகள் எல்லாம்! நீங்க சொல்லுங்க, உங்களுக்கு எப்படி இருக்குன்னு….

இ.ஒ.த-3:

galactic-suite-1_48

விண்வெளி ஹோட்டல் (படம்:கூகுள்)

உங்களுக்கு தெரியுமா, உலகின் முதல் விண்வெளி ஹோட்டல், விண்வெளியில் சுற்றுலா செல்வதற்க்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது!

என்னது, விண்வெளி ஹோட்டலா?! விண்வெளி ஓடம் தெரியும், விண்வெளிக் கப்பல் கூட தெரியும், அது என்ன விண்வெளி ஹோட்டல்?! அப்படின்னு கேட்குறீங்களா?

ஆமாங்க, உலகத்தோட முதல் விண்வெளி ஹோட்டல்,”Galactic Suite Space Resort”, வருகிற 2012-ல் விண்வெளியில சுற்றுலா செல்ல இருக்கு. உங்களுக்கும் விண்வெளி சுற்றுலா போக ஆசைன்னா, சீக்கிரம் போய் முன்பதிவு செய்யுங்க!

என்ன, எவ்வளவு செலவு ஆகும்னு யோசிக்கிறீங்களா? ஒன்னும் அதிகம் இல்லீங்க! வெறும் 4.4 மில்லியன் டாலர்தான்! (சுமார் 22.5 கோடிதாங்க?!).

விஷயம் தெரியுமா உங்களுக்கு, ஏற்கனவே 43 பேர் முன்பதிவு செஞ்சுட்டாங்களாம். அதுமட்டுமில்லாம 200 பேர் இந்த சுற்றுலாபோக விருப்பம் தெரிவிச்சிருக்காங்களாம்!

அப்படி நீங்க இந்த விண்வெளி சுற்றுலா போனீங்கன்னு வச்சுக்கங்க, 80 நிமிஷத்துக்கு ஒரு முறை பூமிய சுத்தி வலம் வருவீங்களாம். அதுமட்டுமில்லாம, ஒரு நாளைக்கு 15 முறை சூரியன் உதயமாகிற அதிசயத்த பார்க்க முடியுமாம். அடேங்கப்பா!

galactic-suiteஇதுவரைக்கும் நான் பூமிதான் நம்மள சுத்தி வரும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். ஆனா இப்பதான் தெரியுது, பூமியக்கூட நாம சுத்தி வரலாமுன்னு! சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, “காலம் கலிகாலமா போச்சுன்னு”!

பார்சிலோனாவைச் சேர்ந்த ஒரு  நிறுவனம்தான் இந்த விண்வெளி ஹோட்டல உருவாக்குச்சாம். சேவியர் க்ளாராமன்ட்-ங்கிறவர்தான் இந்த விண்வெளி ஹோட்டலோட சொந்தக்காரர். அவர், இன்னும் 15 வருஷத்துக்குள்ள வார விடுமுறையை விண்வெளியில கழிக்கிறதுங்கிறது ஒரு பெரிய மேட்டரே இல்ல அப்படிங்கிற மாதிரி ஆயிடும்னு சொல்லியிருக்கிறாராம்! ம்ம்ம்….தோ பக்கத்துல இருக்கிற ஓட்டலுக்குப் போய் தங்கவே நமக்கு முடியல, இதுல எங்க விண்வெளி வரைக்கும் போறதுன்னு கவலப்படுறீங்களா? நானும்தாங்க!

சரி விடுங்க, போக முடியலன்னா என்ன, நம்ம யூட்யூப் இருக்கிற வரைக்கும் அந்த மாதிரி ஓட்டல்ல, விண்வெளி சுற்றுலா போனா எப்படியிருக்கும்னு பார்க்கவாவது முடியும்ல…..

இந்த செய்தியப் பத்தி இன்னும் விவரமா தெரிஞ்சிக்க இங்க போய் பாருங்க

பழைய பதிவுகள் »